போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் நான்கு முதியவர்கள் சிராங்கூன் சாலை வட்டாரத்தில் கைதுசெய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) நேற்று (ஏப்ரல் 24) தெரிவித்தது. கைது செய்யப்பட்டவர்கள் 61 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இவர்களில் ஒருவர் பெண்.
சோதனை நடவடிக்கையின்போது சுமார் 735 கிராம் போதைமிகு அபின், 254 கிராம் ஐஸ் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் சந்தை மதிப்பு ஏறத்தாழ $90,000 என்று சிஎன்பி கூறியது.
தொடக்கமாக, வெள்ளிக்கிழமை பிற்பகல் சிராங்கூன் சாலை வட்டாரத்தில் 61 வயது ஆடவரை சிஎன்பி அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்து 245 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் $3,400 ரொக்கத்தையும் கைப்பற்றினர்.
தொடர் நடவடிக்கையில், 65 வயது பெண், 65 மற்றும் 67 வயதுள்ள இரு ஆடவர்கள் ஆகியோர் சிராங்கூன் சாலையில் கைது செய்யப்பட்டனர். அனைவரும் சிங்கப்பூரர்கள்.
67 வயது ஆடவரிடமிருந்து 521 கிராம் ஹெராயின், 3 கிராம் ஐஸ் ஆகிய போதைப்பொருள்களுடன் $1,500 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர், 65 வயது ஆடவரும் பெண்ணும் அந்த வட்டாரத்தில் உள்ள தனியார் குடியிருப்புப் பேட்டைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 214 கிராம் ஹெராயினும் 6 கிராம் ஐஸும் 65 வயது ஆடவரிடமிருந்து $12,000 ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டன.
பிடிபட்ட அனைவரிடமும் விசா ரணை தொடருகிறது.

