மலேசியா பிராய்லர் கோழி ஏற்றுமதித் தடையை நீக்கியதைத் தொடர்ந்து, முதல் தொகுதி கோழிகள் இங்குள்ள சில பேரங்காடிகளுக்கு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் வந்துசேர்ந்தன.
அதையடுத்து, புதிய முழுக் கோழிகள் அல்லது கோழி இறைச்சித் துண்டுகளை வாங்க இன்று வெள்ளிக்கிழமை ஈரச்சந்தைகளுக்கும் பேரங்காடிகளுக்கும் மக்கள் படையெடுத்தனர்.
கோழி ஏற்றுமதித் தடைக்கு முன்பிருந்ததைவிட இப்போது விலை 15 முதல் 35 விழுக்காடு வரை உயர்ந்ந்தாலும், கோழி விற்பனை குறையவில்லை.
கிட்டத்தட்ட நாலரை மாதங்களாக கோழி வாங்குவதைக் குறைத்துக்கொண்டதாகக் கூறிய சில வாடிக்கையாளர்கள், இப்போது மலேசிய பிராய்லர் கோழிகள் இங்கு மீண்டும் வரவழைக்கப்படுவதால் அவற்றை வாங்க தாங்கள் விரும்புவதாகக் கூறினர்.
பிடோக், கிம் மோ, சிராங்கூன், தோ பாயோ போன்ற வட்டாரங்களில் உள்ள ஈரச்சந்தைகளில் கோழி வாங்க வாடிக்கையாளர்கள் திரண்டனர். புதிய கோழிகள் விரைவில் விற்றுத் தீர்ந்துவிடும் என்பதைக் கடைக்காரர்கள் எதிர்பார்க்கின்றனர்.