தனது பணிப்பெண் பார்வையை இழக்கும்வரை அவரை அடித்து துன்புறுத்திய மாதுமீது ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
உம்மி கல்சும் அலி, 43, தனது இல்லத்தில் வேலைபார்த்த பணிப்பெண்ணை ஆறு மாதங்களுக்கும் மேலாக துன்புறுத்தியுள்ளார். இதனால் பணிப்பெண் தன் கண்பார்வையை நிரந்தமாக இழக்க நேரிட்டது. இந்தக் குற்றத்திற்காக உம்மி கல்சும் அலிக்கு 10 மாத சிறைத் தண்டனையும் $4,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சுகியெம், 51, 2019ஆம் ஆண்டு உம்மியின் வீட்டில் வேலைக்காக வந்தார். 2020ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் சுகியெம் தலையங்கி அணியாத காரணத்தினால், அவர் முகத்திலும் காதிலும் உம்மி பலமுறை அறைந்துள்ளார். அதோடு பணிப்பெண்ணின் கண்களைக் கையால் குத்தியுள்ளார்.
சில நாட்களுக்குப் பின்னர், தனது வலது கண் பார்வையை இழந்துவிட்டதாக சுகியெம் உம்மியிடம் கூறியுள்ளார். மருத்துவரிடம் அழைத்துச்செல்லுமாறு சுகியெம் கேட்டுகொண்டபோதும், அதை உம்மி மறுத்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏப்ரல் 2020க்கும் செப்டம்பர் 2020க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், சுகியெம்மின் கண்களை உம்மி தொடர்ந்து தாக்கியுள்ளார். இதனால் சுகியெம் இரண்டு கண்களிலும் பார்வையை இழக்க நேரிட்டது. பார்வை இழந்த பின்னரும், அவர் மருத்துவரிடம் அழைத்துச்செல்லப்படவில்லை. அந்த நிலையிலும் சுகியெம் வீட்டு வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்.
2020ல் அக்டோபரில் சுகியெம் இந்தோனீசியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை கண்டறியப்பட்டு, அவர் சிங்கப்பூருக்கு விசாரணைக்காக வரவழைக்கப்பட்டார். அவருக்கு சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. ஏனினும் அவருடைய கண்பார்வை திரும்ப வராது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஒருவரை வேண்டுமென்றே காயப்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் உம்மிக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.