கடந்த 2019ஆம் ஆண்டு வெளிநாட்டு ஊழியர் ஒருவரின் மரணத்துக்கு இட்டுச்சென்ற விபத்தின் தொடர்பில், துறைமுகத்தை நடத்தும் நிறுவனத்துக்கு பாதுகாப்பு குறைபாடுகளுக்காக $200,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏஷியா பசிஃபிக் ஷிப்யார்ட் (ஏபிஎஸ்) எனும் அந்த துறைமுக நடத்துநர், வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரச் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட பின்னர் கடந்த புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. மனிதவள அமைச்சு நேற்று இதைத் தெரிவித்தது.
குறிப்பாக அந்நிறுவனம், நியாயமான, நடைமுறைக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்காததற்காகவும் அபராதம் விதிக்கப்பட்டதாக அமைச்சு கூறியது.
கடந்த 2019ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி, பங்ளாதேஷைச் சேர்ந்த ரஹமான் ஸிலுர், 30, மீது ஒரு துறைமுகத்தில் பாரந்தூக்கி மோதியது. ரஹமான் காயங்கள் காரணமாக சம்பவ இடத்தியலேயே உயிர் இழந்தார்.
பாரந்தூக்கியைச் செலுத்திய ஊழியரான சண்முகம் சிவராசுவுக்கு, இவ்வாண்டு ஜூலை 21ஆம் தேதி அன்று 11 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. முறையான பயிற்சி இல்லாமலும், பாரந்தூக்கியின் பிரேக்குகள் பழுதடைந்திருந்தது என்று தெரிந்தும் அவர் அதைச் செலுத்தினார் என்றது மனிதவள அமைச்சு. அவரது பொறுப்பற்ற செயல் ரஹமானின் மரணத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது.
அரசாங்கத் தரப்பு மேல்முறையீடு செய்ததை அடுத்து, அவ்விடத்தில் பணியாற்றிய குழுவின் மேற்பார்வையாளர் எதுவாக்கா மாலி நாயுடுவுக்கு ஆகஸ்ட் 10 அன்று, 11 மாதம் சிறை விதிக்கப்பட்டது. பயிற்சி பெறாத சண்முகம் பாரந்தூக்கியைச் செலுத்த அவர் அனுமதித்திருந்தார்.
அவ்வேலையிடத்தை இயக்கிய பணிசெய்த ஏபிஎஸ் நிறுவனம், அனுமதி பெறாது பாரந்தூக்கிகள் இயக்கப்படுவதைத் தடுக்கவில்லை என்றும் வேலையிடத்தில் பாரந்தூக்கிகள் முறையாகப் பராமரிக்கப்படுவதையும் திறன்வாய்ந்த ஊழியர்கள் பழுதுபார்ப்பதையும் உறுதி செய்யவில்லை என்றும் மனிதவள அமைச்சு கூறியது.

