பிரதமர் லீ சியன் லூங் ஒரு வார அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று சீனா செல்கிறார். வரும் சனிக்கிழமை வரை அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பிறகு அவர் சீனா செல்வது இதுவே முதல்முறை.
தமது சீனப் பயணத்தின்போது சீன அதிபர் ஸி ஜின்பிங், சீனப் பிரதமர் லி சியாங் உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுவார்.
சீனப் பிரதமர் லியின் அழைப்பை ஏற்றுச் செல்லும் சிங்கப்பூர் பிரதமர், குவாங்ஸோ, போவாவ், பெய்ஜிங் ஆகிய இடங்களுக்குச் செல்வார்.
ஆண்டுக்கொருமுறை நடைபெறும் போவாவ் ஆசியக் கருத்தரங்கில் திரு லீ உரையாற்றுவார்.
வெளிநாட்டுத் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், வர்த்தகத் தலைவர்கள், கல்விமான்கள் ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்துகொள்வர்.
பெய்ஜிங்கில் பிரதமர் லீக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கும் விருந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர்ப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
ஹைனான், குவோங்டாங் ஆகிய வட்டாரங்களில் பல்வேறு அரசியல் தலைவர்களைத் திரு லீ சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்பட்டது.
குவோங்டாங்கில் வசிக்கும் சிங்கப்பூரர்களையும் அவர் சந்திப்பார்.
பிரதமருடன் அவரின் துணைவியார், வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், சுகாதார அமைச்சர் ஓங் யி காங், வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சர் சிம் ஆன், சுகாதாரம், சட்டம் ஆகிய துறைகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயூ மஹ்ஸாம், பிரதமர் அலுவலக அதிகாரிகள், வெளியுறவு, வர்த்தக, தொழில் அமைச்சுகளின் அதிகாரிகள் உள்ளிட்டோர் செல்கின்றனர்.
பிரதமரின் சீனப் பயணத்தின்போது, இன்றும் நாளையும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பேற்றிருப்பார்.
புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பேற்பார்.