சிங்கப்பூரில் உள்ள குதிரைப் பந்தய ஆர்வலர்களுக்கு திங்கட்கிழமை வெளியான செய்தி சோகத்தைத் தந்ததோடு வருத்தத்தையும் வரவழைத்தது. குதிரைப் பந்தயத் திடல் விரைவில் மூடப்படும் என்பதே அந்தச் செய்தி.
குதிரைப் பந்தயத்துக்கு முடிவுகட்டப்பட இருப்பதாக ஒரு வார காலமாக உலவி வந்த வதந்திக்கு திங்கட்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
குதிரைப் பந்தயக் கழகத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான ஐரின் லிம் தனித்தனியாக இரண்டு அவசரக் கூட்டங்களை நடத்தினார். முதலில் கழகத்தின் பணியாளர்களிடமும் பின்னர் பந்தயப் பயிற்றுவிப்பாளர்களிடமும் அவர் ேபசினார்.
கிராஞ்சி குதிரைப் பந்தயம் அடுத்த ஆண்டுடன் விடைபெற இருப்பதாக அதன் பின்னர் அறிவிக்கப்பட்டது.
2024 அக்டோர் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் பந்தயமே சிங்கப்பூரில் குதிரைப் பந்தயத்தின் கடைசிப் பந்தயமாக இருக்கும் என்று தேதி குறிக்கப்பட்ட விவரமும் வெளியிடப்பட்டது.
பிற்பகலில் நிதி அமைச்சும் தேசிய வளர்ச்சி அமைச்சும் செய்தியாளர்களைச் சந்தித்தன.
குதிரைப் பந்தயத்துக்காக 1999ஆம் ஆண்டுமுதல் பயன்படுத்தப்பட்டு வரும் 120 ஹெக்டர் நிலப்பரப்பு 2027 மார்ச்சுக்குள் அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட இருப்பதாக இரு அமைச்சுகளும் அப்போது உறுதிப்படுத்தின.
மறுமேம்பாட்டுக்காக அந்த நிலப்பரப்புப் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் அவை கூறின.
இந்த முடிவு தமக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக தீவிர குதிரைப் பந்தய விரும்பியும் ஓய்வுபெற்றவருமான திரு டேனி பிள்ளை கூறினார்.
குதிரைப் பந்தயக் கழகத்தின் முன்னாள் மேலாளர் வைலட் லீ கூறுகையில், “இது பணக்காரர்களுக்கு மட்டுமல்ல, பங்களிக்கும் அனைவருக்கும் இழப்பு,” என்றார்.
முன்னணிப் பயிற்றுநரும் சிங்கப்பூர் பந்தயக் குதிரை பயிற்றுநர் சங்கத் தலைவருமான மைக்கல் கிளமெண்ட்ஸ் சோகத்துடன் காணப்பட்டார். இதர 21 பயிற்றுநர்களின் உணர்வுகளை பிரதிபலித்த அவர், 181 ஆண்டு காலத் தொழிலை 16 மாதங்களில் முடிவுக்குக் கொண்டுவருவது கடினமான ஒன்று என்றார்.