சிங்கப்பூரின் துவாஸ் டிவி வோர்ல்ட் வளாகத்தின் எஞ்சிய கட்டடங்களும் இடிக்கப்படவுள்ளன.
ஒரு காலத்தில் இந்த வட்டாரத்தில் ஆகப் பெரிய வெளிப்புற படப்பிடிப்பு நிலையமாகத் திகழ்ந்த இது 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்குள் முழுமையாக இடிக்கப்படும்.
6.6 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட வளாகத்தில் எட்டு படப்பிடிப்புக் கூடங்கள் இருந்தன.
1990ஆம் ஆண்டுக்கும் 1992ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகம் (எஸ்பிசி) சுமார் 35 மில்லியன் வெள்ளிச் செலவில் இந்த வளாகத்தை அமைத்தது.
எஸ்பிசி பின்னர் 'மீடியாகார்ப்'பாக உருமாறியது.
துவாஸ் டிவி வோர்ல்ட் இயங்கத் தொடங்கி சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்பிசிக்கு அதை நிர்வகிக்க அதிக செலவானது என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
1990களுக்குப் பிறகு அந்த கால வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாடகங்கள் அதிகம் தயாரிக்கப்படாதது அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
2001லிருந்து இந்நிலையம் சில ஆண்டுகளுக்கு காவல்துறைப் பயிற்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.
இதில் கிட்டத்தட்ட 100 கட்டடங்கள் இருந்தன.
இப்போது சுமார் 15 மட்டுமே எஞ்சியுள்ளன.