சிங்கப்பூரர் திரு மகேஷ் புலேந்திரன் மே மாதம் பாலித் தீவுக்குப் பயணம் சென்றபோது, எல்லாச் சுற்றுப்பயணிகளையும் போலவே அவரும் கடன் அட்டையைப் பயன்படுத்தினார்.
ஆனால், சில தினங்களுக்குப் பிறகு தனது பரிவர்த்தனைகளை ஆராய்கையில், அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 80 கிலோமீட்டர் தூரத்திலிருந்த தொலைத்தொடர்புக் கடை ஒன்றில் $7,000-க்குமேல் செலவு செய்திருப்பதாகக் காட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சிங்கப்பூரில் நிதி ஆலோசகராகப் பணிபுரியும் திரு மகேஷ், தன்னுடைய டிபிஎஸ் கடன் அட்டையை யாரோ நகலெடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்.
“நான் மே 4ஆம் தேதி பாலிக்குச் சென்று, தெற்கிலுள்ள செமின்யாக்கில் தங்கினேன். ஆனால், வடக்கில் கராங்கசம் வட்டாரத்தில் உள்ள இ-கோ செல் என்ற கடையில் என் கடன் அட்டையைப் பயன்படுத்தி செலவு செய்யப்பட்டிருக்கிறது,” என்று 50 வயதாகும் திரு மகேஷ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
மே 8ஆம் தேதி, சிங்கப்பூரிலுள்ள நண்பருக்கு பேநவ் வழியாகப் பணம் அனுப்ப முயற்சி செய்த போதுதான் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனையை அவர் கவனித்தார். உடனடியாக நண்பரின் உதவியுடன் வங்கியைத் தொடர்புகொண்டார். அதே நாளில் கடன் அட்டையை வங்கி முடக்கியது.
மே 9 அன்று சிங்கப்பூருக்குத் திரும்பிவந்த திரு மகேஷ், கட்டணம் குறித்து மனு செய்ததோடு, காவல்துறையிலும் புகார் செய்தார்.
மே 21ஆம் தேதி வங்கிப் பிரதிநிதி அவருடன் தொடர்பு கொண்டு, $7,126.52 தொகை தற்காலிகமாகத் திருப்பித் தரப்படும் என்று தெரிவித்தார்.
ஆனால், கடை அவரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் அல்லது பரிவர்த்தனை சட்டபூர்வமானதெனக் கண்டறியப்பட்டால், திருப்பித் தரப்படும் தொகையை வங்கி திரும்ப எடுத்துக்கொள்ளும்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய பரிவர்த்தனை கடன் அட்டையுடன் செய்யப்பட்டிருப்பதால் வங்கி எதுவும் செய்ய இயலாது என்று ஜூன் 16ஆம் தேதி மின்னஞ்சல்வழி வங்கி அவரிடம் தெரியப்படுத்தியுள்ளது.
“நான் எதற்காக பாலியின் வடக்குப்பகுதி வரை சென்று $7,000 மதிப்புள்ள தொலைத்தொடர்பு பொருள்களை வாங்கவேண்டும்? நான் செமின்யாக்கில்தான் இருந்தேன், ஆனால் என் பணத்தைத் திரும்பப் பெற நான் எதையும் வாங்கவில்லை என்பதை நானாக நிரூபிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்,” என்றார் திரு மகேஷ்.