துவாஸ் கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில் 31 வயது ஆடவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சுவரை உறுதியாக வைத்திருந்த கம்பியின் ஒரு பகுதியும் தொங்குமேடையும் விழுந்ததால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
71ஏ துவாஸ் நெக்சஸ் டிரைவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து வியாழக்கிழமை அதிகாலை 5.25 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட கட்டுமானத் தளம், துவாஸ் தண்ணீர் மீட்பு ஆலைக்கானது.
காயமடைந்த ஆடவர் அந்தக் கட்டுமானத் தளத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர் என்று பொதுப் பயனீட்டுக் கழகம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. அவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.