சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் வெள்ளிக்கிழமை ஏழு ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அவர்களில் 33 வயது ஜாக்கி லிம் யீ லீ, 29 வயது ஹோ ஜியா ஜின், 34 வயது ஜாவ் ஹுவான்ஹுவான், 23 வயது எங்கு நூர் சிமான் நூர் அசார், 19 வயது முகம்மது ஹெர்மான் முகம்மது இப்ராஹிம், 33 வயது முகம்மது ஹெல்மி கமாருதீன் ஆகியோர் உள்ளடங்குவர்.
ஏழாமவருக்கு 17 வயது என்பதால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. சிறுவர்கள் மற்றும் இளையர் சட்டத்தின்கீழ் 18 வயதுக்குக் குறைவானவர்களின் அடையாளம் பாதுகாக்கப்படுகிறது.
இந்த எழுவரும் போலி நட்புத் தொலைபேசி அழைப்பு மோசடிகள், முதலீட்டு மோசடிகள், வேலை, வாடகை மோசடிகள், அரசாங்க அதிகாரிபோல் பாசாங்கு செய்யும் ஆள்மாறாட்ட மோசடிகள் போன்ற பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டிருப்பதன் பேரில் சந்தேகிக்கப்படுவதாகப் போலிசார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்தனர்.
வங்கிக் கணக்குகளை விற்க அல்லது வாடகைக்குவிட, டெலிகிராம் அல்லது ஃபேஸ்புக் ஊடகத்தளங்களில் மோசடிக் கும்பல்களுடன் இவர்கள் ஒப்பந்தங்கள் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக, தங்களது வங்கிக் கணக்குகளை அவர்கள் விற்றதாக அல்லது வாடகைக்கு விட்டதாக நம்பப்படுகிறது. மோசடிக் கும்பல்களிடம் ஒவ்வொரு கணக்கையும் $500 முதல் $900 வரையிலான விலைக்கு விற்பதற்காக அல்லது வாடகைக்கு விடுவதற்காக வங்கிகளை ஏமாற்றிப் புதிய கணக்குகளை அவர்கள் திறந்ததாகவும் நம்பப்படுகிறது.