நிஞ்சா வேன் ஊழியரைப் போல் சிலர் வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்ட மோசடி செய்வதாக அந்தத் தளவாட நிறுவனம் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை வெளியிட்டது.
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அல்லது சந்தைப் பிரிவிலிருந்து தொடர்பு கொள்வதாகச் சொல்லிக்கொண்டு, வாட்ஸ்அப் மூலம் மோசடி செய்ய முயற்சி செய்ததாகப் பொதுமக்கள் நிறுவனத்திடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
இத்தகைய மோசடியில் நிறுவனத்தின் விநியோகச் சேவை பற்றிய ஒரு சிறு ஆய்வைப் பூர்த்தி செய்தால் பணம் சன்மானமாகக் கிடைக்கும் என முதலில் ஆசைக்காட்டுவார்கள். ஆய்வைப் பூர்த்தி செய்தவர்களிடம் வேறு சில பணிகளைச் செய்யச் சொல்வார்கள். அதன்மூலம் அவர்களை ஏமாற்றி பணத்தை அபகரிப்பார்கள்.
இந்தத் தகவல்கள் வெளிநாட்டுத் தொலைபேசி எண்களிலிருந்து வந்தன. எத்தியோப்பியா, உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தொலைபேசிக் குறியீடுகள் தகவல்களில் காணப்பட்டன.
“இந்தத் தகவல்களுக்குப் பதில் அளிக்கவோ அல்லது இணைப்புகள்மீது அழுத்தவோ வேண்டாமென்று பொதுமக்களுக்கு ஆலோசனை கூறுகிறோம்,” என்று நிஞ்சா வேன் கூறியது.
அதிகாரபூர்வமான நிஞ்சாசேட் சமூக ஊடகம், வாட்ஸ்அப் கணக்கு போன்றவற்றிலிருந்து மட்டுமே நிறுவனம் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.
அண்மையில் ஜூன் 6ஆம் தேதி இதுபோன்ற மோசடி ஆய்வில் ஒருவர் பங்கெடுத்தார். ஆய்வைப் பூர்த்தி செய்தவுடன், டெலிகிராமில் வேறொருவருடன் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். அவரும் அவ்வாறே செய்தார். சன்மானத்தை ‘பேநவ்’ வழியாக அனுப்பிவைக்க தொலைபேசி எண் கேட்கப்பட்டது. அவரும் கொடுத்தார்.
‘அயு யூலியானா பிந்தி சஹாரி’ என்பவருடன் இணைக்கப்பட்ட ஒரு கணக்கிலிருந்து அவருக்கு $15 கிடைத்தது. அதன்பின்னர், இன்னும் பல ஆய்வுகளில் பங்குபெற ஒரு டெலிகிராம் குழுவில் அவரைச் சேரச் சொன்னார்கள். ஆனால், நல்ல வேளையாக அவர் அவ்வாறு செய்யாமல் நிஞ்சா வேன் நிறுவனத்திடம் தெரியப்படுத்தினார். நிறுவன ஊழியரின் துணையுடன் ஜூன் 14ஆம் தேதி காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.
நிஞ்சா வேன் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி வேறு சில மோசடிகளும் செய்யப்படுவதாக அதன் இணையத்தளம் தெரிவிக்கிறது.