தஞ்சோங் பகாரில் இடிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்த ஃபூஜி செராக்ஸ் கட்டடத்தின் ஒரு பெரிய சுவர் இடிந்து விழுந்ததில் மாண்ட இந்திய ஊழியரின் இறுதிச் சடங்கு அவரின் சொந்த ஊரில் நடைபெற்றது.
திருப்பத்தூரின் வீரானமலை கிராமத்தில் நடைபெற்ற திரு வினோத் குமாரின் இறுதிச் சடங்கில் சுமார் 1,000 பேர் கலந்துகொண்டதாக அவரின் உறவினரான ராஜமாணிக்கம் தெரிவித்தார்.
வீரானமலை கிராமவாசிகள், சுற்று வட்டாரங்களில் வசிப்பவர்கள், திரு வினோத்தின் உறவினர்கள் ஆகியோர் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். ஜூன் மாதம் 18ஆம் தேதியன்று இறுதிச் சடங்கு நடைபெற்றது.
20 வயது வினோத் இறந்துபோன துயரச் செய்தியை அவரின் பெற்றோரிடம் தன்னால் தெரியப்படுத்த முடியவில்லை என்று திரு ராஜா தொலைபேசிவழி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.
திரு வினோத்தின் உடலைக் காண பலர் தங்களின் வீட்டு வாசலில் கூடியபோதுதான் பெற்றோருக்கு செய்தி தெரிய வந்தது; மகனின் உடலைக் கண்ட பிறகு அவர்கள் மூச்சு விடமுடியாத அளவிற்குக் கதறி அழுததை 44 வயது திரு ராஜா விவரித்தார்.
இறுதிச் சடங்கு நடந்து முடிந்த பிறகு நான்கு நாள்களுக்குத் தன்னால் உறங்கவோ உணவு உட்கொள்ளவோ முடியவில்லை என்று அவர் கூறினார்.
அவ்வளவு துயரத்துக்குத் தான் ஆளானதாகச் சொன்னார்.
திரு வினோத் இறந்த செய்தி வெளியானதும் அவரின் குடும்பத்துக்கு உதவ சுமார் 85 பேர் தங்களைத் தொடர்புகொண்டதாக இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ் அமைப்பு தெரிவித்தது. இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ், வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிங்கப்பூரைச் சேர்ந்த நன்கொடை அமைப்பு.