சீனாவின் குவாங்டோங் மாநிலம் சிங்கப்பூரின் மிக முக்கிய வர்த்தக பங்காளியாகத் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. சிங்கப்பூருக்கும் குவாங்டோங்கிற்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகம் 2022ல் சாதனை அளவை எட்டி இருக்கிறது.
இதனையடுத்து 34வது ஆண்டாக சிங்கப்பூரின் தலைசிறந்த சீன வர்த்தக மாநிலமாக குவாங்டோங் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.
சிங்கப்பூருக்கும் அந்த மாநிலத்திற்கும் இடைப்பட்ட இரு வழி வர்த்தகம் 2022ல் ஆண்டுக்காண்டு அடிப்படையில் சாதனை அளவாக 17% கூடி US$23.1 பில்லியனாக (S$31.2 பில்லியன்) உயர்ந்தது.
சீனா பொருளியலைத் திறந்துவிட்டதும் கொவிட்-19க்குப் பிறகு சீனப் பொருளியல் தலையெடுப்பதும் இதற்கான காரணங்கள்.
சென்ற ஆண்டு முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இரு தரப்பு வர்த்தகம் 54% கூடி US$6.7 பில்லியனானது என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்தது.
சீனாவின் தென் மாநிலமான குவாங்டோங்கில் மேலும் தொழில்களை விரிவுபடுத்த சிங்கப்பூர் நிறுவனங்கள் தொடர்ந்து ஆர்வமாக இருந்து வருகின்றன என்று திங்கள்கிழமை நடந்த 13வது சிங்கப்பூர்-குவாங்டோங் ஒத்துழைப்பு மன்றக் கூட்டத்தில் சுகாதார அமைச்சரும் அந்த மன்றத்தின் இணைத் தலைவருமான ஓங் யி காங் குறிப்பிட்டார்.
இந்த மன்றத்தின் கூட்டம் 2019க்கு பிறகு இந்த ஆண்டு தான் முதன்முதலாக நடந்தது. அதில் இரு தரப்புகளுக்கும் இடையில் மொத்தம் 21 புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாயின.
எடுத்துக்காட்டாக டிபிஎஸ் வங்கியானது சீனா-சிங்கப்பூர் குவாங்சூ அறிவார்ந்த நகர் என்ற தொழிற்பேட்டையில் டிபிஎஸ் டெக் சைனா என்ற நிறுவனத்தை ஏற்படுத்தும்.
தொடர்புடைய செய்திகள்
கரிமக் கழிவற்ற நிலையை 2030ஆம் ஆண்டு வாக்கில் சாதிப்பது என்ற பொதுவான இலக்கை சிங்கப்பூரும் சீனாவும் கொண்டிருப்பதாகவும் அந்த இலக்கைச் சாதிக்க தோதாக வழிகாட்டித் திட்டங்களை அவை தொடங்கி இருப்பதாகவும் திரு ஓங் குறிப்பிட்டார்.
குவாங்சூ பொதுப் போக்குவரத்து குழுமத்துடன் கம்பர்ட்டெல்குரோ புதிய புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது.
மின்சார வாகன மின்சக்தி ஏற்றுதல், எரிசக்தி சேமிப்பு போன்ற பசுமைத் தீர்வுகளைக் காண இந்தக் குறிப்பு வகைசெய்யும் என்று தெரிவித்த திரு ஓங், பசுமைப் பொருளியல், சுற்றுச்சூழல் துறைகளில் மேலும் ஒத்துழைப்புகளைக் காணலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மின்னிலக்கப் பொருளியலைப் பொறுத்தவரை சிங்கப்பூர், சீனா, ஆசியான் நாடுகள் அனைத்தும் தொடர்ந்து பாடுபட்டு மின்னிலக்க வர்த்தகத்தையும் கணினித் தகவல் புழக்கத்தையும் ஆதரிக்கும் நியதிகளின் பேரில் கருத்திணக்கம் காண வேண்டும் என்று திரு ஓங் கூறினார்.
சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு குவாங்டோங்கின் மருத்துவ நிலையங்களுடன் சேர்ந்து ஆய்வு, மருந்தகப் பரிசோதனைகளில் ஒத்துழைக்கும் என்றும் திரு ஓங் குறிப்பிட்டார்.

