காலணிகளைக் கழற்றிவிட்டு கால்களை இருக்கைகளின்மேல் வைத்தபடி தூங்கிக்கொண்டிருக்கும் பயணிகளின் படங்களை ‘ஸ்டோம்ப்’ வாசகர்கள் பகிர்ந்துள்ளனர்.
கிழக்கு-மேற்கு தடத்தில் சேவை வழங்கிய ரயில்களுக்குள் அந்தப் பயணிகளைக் கண்டதாக அவர்கள் கூறினர்.
திரு வோங் என்பவர் பகிர்ந்த படத்தில் உள்ள ஆடவர் கால்களைச் செங்குத்தாக மேல்நோக்கிச் சாய்த்தபடி சில இருக்கைகளில் படுத்துள்ளார். முதியோர், சிறு பிள்ளைகளுடன் வருவோர் உள்ளிட்ட முன்னுரிமை பெறக்கூடியவர்களுக்கான இருக்கையும் அவற்றில் அடங்கும். அந்த ஆடவரின் காலணிகள், கைத்தொலைபேசி, பணப்பை ஆகியவை அவரைச் சுற்றிலும் சிதறிக் கிடப்பதைப் படத்தில் காணமுடிகிறது.
படத்தைப் பகிர்ந்தவர் குறும்பாக, ஆடவர் யோகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊட்ரம் பார்க் நிலையத்திலிருந்து துவாஸ் லிங்க் நோக்கிச் செல்லும் ரயிலில் ஜூன் 11ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் மது அருந்திய நிலையில் அந்த ஆடவரைத் தான் கண்டதாக அவர் கூறினார்.
ஜூன் 12ஆம் தேதி அதே தடத்தில் சேவை வழங்கிய ரயிலில் மற்றோர் ஆடவர் சில இருக்கைகளை ஆக்கிரமித்தபடி சென்றதாக வேறொரு வாசகர் பதிவிட்டுள்ளார்.
இவரும் முன்னுரிமை பெறக்கூடியவர்களுக்கான இருக்கையை ஆக்கிரமித்திருந்தார். படத்தில், கழற்றி விடப்பட்ட அவரது காலணிகளுடன் பயணப்பை ஒன்றையும் அவரருகே காணமுடிகிறது. பூன் லே நிலையத்தில் ரயிலில் ஏறியபோது தான் அந்த ஆடவரைக் கண்டதாக படத்தைப் பகிர்ந்தவர் கூறினார்.