ஆக அமைதியான உலக நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆசிய நாடுகளில் சிங்கப்பூர்தான் ஆக உயரிய இடத்தைப் பிடித்துள்ளது.
‘ஐஇபி’ எனப்படும் சுயேச்சையாக இயங்கும் லாபநோக்கில்லா வல்லுநர் அமைப்பான பொருளியல், அமைதிக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.
உலகளாவிய அமைதிக் குறியீட்டுப் பட்டியலில் சிங்கப்பூர் நான்கு இடங்கள் முன்னேறியிருக்கிறது. 2022ஆம் ஆண்டில் 10வது இடத்தைப் பிடித்தது சிங்கப்பூர்.
பெரும்பாலான ஆசிய நாடுகள் பட்டியலின் முற்பாதியில் இடம்பிடித்தன.
பட்டியலில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. 2008ஆம் ஆண்டிலிருந்து அந்நாடு உலகின் ஆக அமைதியான நாடாக இருந்து வருகிறது.
டென்மார்க், நியூசிலாந்து, ஆஸ்திரியா, ஜப்பான், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன. தொடர்ந்து எட்டாவது ஆண்டாக ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.

