ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் முதியோர்களின் நலத்தைப் பேணவும் புதிய சமூக மறுவாழ்வு மையம் ஒன்றை உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் ஸ்ரீ நாராயண மிஷன் சனிக்கிழமை திறந்து வைத்தது.
முதியோரின் லனுக்காக பல முயற்சிகளை ஶ்ரீ நாராயண மிஷன் தொடர்ந்து அறிமுகப்படுத்தும் இந்நிலையில் இந்த முதியோர்க்கான மையம் அவர்களை சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க ஊக்கமூட்டும் என்று சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த செம்பவாங் நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் ஜஃபார் கூறினார்.
“இந்த மையத்தை திறக்க பல சமூக அமைப்புகள் ஒன்றுகூடி செயல்பட்டன. ஒருங்கிணைந்த சமூகமாக செயல்பட்டால் நம் சமூகத்திற்கு தொடர்ந்து உதவ முடியும்” என்றார் குமாரி மரியம்.
இந்த மையத்தில் காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை முதியோர்க்கான பலவிதமான நடவடிக்கைகளும் பயிற்சிகளும் இலவசமாக அளிக்கப்படும். சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்க ‘ஸும்பா’, உடற்பயிற்சி வகுப்புகள் போன்றவை காலையில் நடத்தப்படும்.
துடிப்பான வாழ்கையை வாழ மனதையும் மூளையையும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்பதால் கலை தொடர்பான வகுப்புகள், இசை, நடன நிகழ்ச்சிகள் அன்றாடம் நடத்தப்படும் என்பதை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான குமாரி சுமிதா இன்சின் தமிழ் முரசிடம் கூறினார்.
“மனஉளைச்சல், ஞாபக மறதி போன்ற சிக்கல்களை எதிர்நோக்கும் நம் முதியோர்களுக்கு இந்த நிகழ்ச்சிகள் ஒரு புத்துணர்ச்சியை தரும் என்று நம்புகிறோம்,” என்றார் அவர்.
முதியோர்களுக்கு சுலபமாக பயன்படுத்த கருவிகளும் விளையாட்டுகளும் இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டார் சுமிதா.
இந்த மையம் திறந்ததில் தனக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்று எண்ணி மகிழ்கிறார் 75 வயது சுஜாதா நாயர்.
“இதற்கு முன் எனக்கு பல முறை உதவிய ஶ்ரீ நாராயண மிஷன் என்னை போன்ற வயதானவர்களின் நல ன் கருதி இந்த மையத்தை திறந்தது சிறப்பு. வீட்டில் தூங்கிக்கொண்டே மந்தமாக இருப்பதைவிட இங்கு வந்து சுறுசுறுப்பாக இருக்கலாம்,” என்றார் திருமதி சுஜாதா.
ஸ்ரீ நாராயண மிஷனின் சமூக சுகாதார விழாவை முன்னிட்டு இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனை போன்ற உடல் நல பரிசோதனைகள் அங்கு வசிப்பவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
அதில் ஒருவரானஏஞ்சலின், ‘ ஃபிரண்ட்ஸ் ஆஃப் எஸ்என்எம்’ என்ற அமைப்பை சேர்ந்தவர். உட்லண்ட்ஸ் வட்டார முதியவர்களுக்கு சமூக சேவையுடன் உதவிகளையும் கொண்டு செல்ல பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
“ மனநலம், உடல்நலம் தொடர்பான சிக்கல்களை நம் சமூகத்திற்கு குறிப்பாக முதியோரிடம் கொண்டு செல்ல நாம் தொடர்ந்து பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்த வட்டாரத்தில் உள்ள சேவைகளை ஒரு வரைபடமாக அமைத்து இந்த மையத்தில் வைத்துள்ளோம். இதைப் பார்த்து முதியோர் அவர்களுக்கு தேவையான உதவி பெற நாடலாம் என்று நம்புகிறோம்” என்றார் சமூக சேவையாளர் ஏஞ்சலின்.