சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் தலைசிறந்த முறையில் சேவையாற்றக்கூடிய தலைசிறந்த குழுவைத் தொடர்ந்து பொறுப்பில் அமர்த்துவதே மக்கள் செயல் கட்சி எதிர்நோக்கும் ஆகப் பெரிய சவால் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்தார்.
நேர்மைமிக்க தரத்துடன் நிர்வாக முறை ஒன்றை நிலைநாட்டி வருவது என்பது ஒட்டுமொத்த முயற்சி என்றும் அவர் கூறினார். அரசியலில் ஈடுபடுவதற்கு பல தியாகங்களைச் செய்ய வேண்டி இருக்கும் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிந்த ஒன்று என்றும் சிறந்த முறையில் செயல்பட்டால் மனநிறைவு ஒன்றுதான் கிடைக்கக்கூடிய ஆகப் பெரிய வெகுமதி என்றும் அவர் சொன்னார்.
வெறும் புகார்கள், புரளிகள், எண்ணங்கள் ஆகியவற்றைச் சார்ந்திராமல் உண்மை நிலவரங்களில் ஒருமித்த கவனம் செலுத்த நாடாளுமன்றம் இணங்கி இருப்பது மகிழ்ச்சி என்றார் திரு டியோ.
ரிடவ்ட் ரோடு பங்களா விவகாரம் தொடர்பில் ஆறு மணி நேரம் நடந்த விவாதத்தை முடித்துவைத்துப் பேசிய மூத்த அமைச்சர், சிங்கப்பூரர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்ற புடம்போட்டு பரிசோதிக்கப்பட்ட ஐந்தாம் தலைமுறைத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த பிரதமருக்கு உதவுவது தமது பணி என்று வலியுறுத்திக் கூறினார்.

