குடியரசு ஆகாயப் படை தனது 55வது ஆண்டுநிறைவை கொண்டாடும் விதமாக, இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பில் தனது பங்குக்கு கூடுதல் விமானங்களை ஈடுபடுத்தவுள்ளது.
இதற்கு முன்னர் காணப்பட்ட ஐந்து தேசிய தின அணிவகுப்பில் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு அணிவகுப்பில் அதிகமான விமானங்கள் ஆகாய வெளியை அலங்கரிக்கும் என்று கூறப்படுகிறது.
பாடாங்கில் நடைபெறும் அணிவகுப்பை கிட்டத்தட்ட 27,000 பார்வையாளர்கள் கண்டுகளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முதலாக விமானப் படையின் மிகப் பெரிய ஏ330 ரக விமானங்கள் அணிவகுப்பின் முன்னணியில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆகாய வெளி அணிவகுப்பில் மொத்தம் 21 விமானங்கள் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது. அவற்றில் மற்றொரு வரவாக ஹெச்225எம் ரக ஹெலிகாப்டர்களும் அடங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாண்டு விமான அணிவகுப்புக் காட்சி, 2018ஆம் ஆண்டு ஆகாயப் படை தனது 50 ஆண்டு நிறைவைக் கொண்டாட நடத்திய அணிவகுப்புக்குப் பின்னர் நடைபெறும் ஆகப் பெரிய அணிவகுப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அணிவகுப்பில் பங்கேற்கும் போர் விமானங்கள் வேகமாக சட்டென திரும்பும் சாகசத்தை புரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், புதிய அணிவகுப்பில் மற்றோர் புதிய நடவடிக்கையாக மூன்று போர் விமானங்கள் ஒன்று மற்றொன்றின் பாதையில் குறுக்கே சென்று சாகசம் புரியும் என்றும் கூறப்படுகிறது.