கடந்த மூன்று ஆண்டுகளில் அனைத்துலக பாக்குலரேட் பட்டயக் கல்வி(IB) மற்றும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (IP) ஆகியவற்றில் பயின்ற பத்து மாணவர்கள், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தாதிமை பட்டக் கல்வியில் சேர்ந்துள்ளனர்.
இதே போன்று இரண்டு கல்வி நிலையங்களைச் சேர்ந்த மேலும் ஐந்து மாணவர்கள், நன்யாங் மற்றும் நீ ஆன் பலதுறைத் தொழில்கல்லூரியில் தாதிமை பட்டயக் கல்வியில் சேர்ந்தனர்.
இந்தத் தகவலை புதன்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட சுகாதார அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம், நான்கு ஆண்டுகள் படிப்பை முடித்த பெரும்பாலான மாணவர்கள் பலதுறைத் தொழிற்கல்லூரியைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றார்.
சிங்கப்பூரில் மூப்படையும் மக்கள்தொகையால் தாதியர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மூத்தோரைப் பராமரிக்க போதுமான உள்ளூர் தாதியர்கள் இல்லாததால் வெளிநாட்டு தாதியர்களால் வேலையிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உள்ளூரில் பலர் தாதியராக முன் வந்துள்ளனர்.