சாலையில் வேன் ஒன்று சறுக்கி ஓடி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் காயமடைந்தார்.
இச்சம்பவம் சிலேத்தார் விரைவுச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.40 மணியளவில் நிகழ்ந்தது.
புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில், லென்டோர் அவென்யூ வெளிவழிக்குமுன் இவ்விபத்து நிகழ்ந்தது என்று சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அந்த வேனின் 38 வயது ஓட்டுநர் தன்னுணர்வுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
விரைவுச்சாலையின் முதலிரு தடங்களில் பக்கவாட்டில் அந்த வேன் கவிழ்ந்து கிடந்ததை எஸ்ஜிரோடுவிஜிலன்ட் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள காணொளி காட்டியது.
அவ்வாகனத்திலிருந்து புகை வெளிவந்தபடி இருந்தது. வாகனத்தின் உடைந்த பாகங்கள் விபத்து நிகழ்ந்த பகுதியில் சிதறிக் கிடந்தன.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.