சிங்கப்பூரிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆறு ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) கருவிகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அக்கருவிகள் இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வழங்கப்படும்.
அஞ்சல் மூலம் விநியோகிக்கப்படும் அக்கருவிகளை இவ்வாண்டு இறுதிவரைக்கும் பயன்படுத்தலாம்.
குளிர்காலத்தின்போது சளிக்காய்ச்சல், கொவிட்-19 போன்ற கிருமிகள் எளிதில் பரவக்கூடும். அதனால், ஆண்டிறுதி விடுமுறையில் குடும்பங்கள் பயணம் செய்யும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க இந்த ‘ஏஆர்டி’ கருவிகள் உதவியாக இருக்கும்.
‘ஏஆர்டி’ கருவிகள் வழங்கப்படுவது இது ஐந்தாவது முறை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற நான்காவது நடவடிக்கையின்போது 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 12 கருவிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், சிங்கப்பூரர்கள் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும், குறிப்பாக மூத்தோர் உள்ளிட்ட எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோரை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.