50 வயதுக்கும் மேற்பட்ட மக்களில் அதிகமானோரை ஊக்குவித்து அவர்கள் வாழ்வின் இறுதி காலத்திற்குச் சிறந்த திட்டங்களைக் கொண்டிருக்க வகை செய்யும் ஓர் இயக்கம் சனிக்கிழமை தொடங்கியது. அதன்படி, தன் சார்பில் செயல்பட நம்பிக்கைக்குரிய ஒருவரை அமர்த்திக்கொள்ள அனுமதி கேட்பதற்கான விண்ணப்பங்களுக்கு (எல்பிஏ) உரிய மானியம் உயர்த்தப்பட்டு உள்ளது. சிங்கப்பூரில் 50 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ள மக்களில் 240,000 பேர், 2025ஆம் ஆண்டுவாக்கில் அத்தகைய ஏற்பாடு ஒன்றைக் கொண்டிருக்கும்படி செய்வது இலக்கு. விண்ணப்பதாரரின் மூளை செயல்படும் ஆற்றலை இழந்துவிட்டால் அவர் சார்பில் முடிவு எடுக்கும் உரிமையை நம்பிக்கைக்கு உரிய ஒருவரிடம் ஒப்படைக்க இந்த ஏற்பாடு அனுமதிக்கிறது.
சிங்கப்பூரில் இன்றைய தேதியில் 220,000 இத்தகைய விண்ணப்பங்கள் தாக்கலாகி இருக்கின்றன. அவற்றில் முக்கால் பங்கு அல்லது 165,000 விண்ணப்பங்கள் மட்டுமே 50 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உள்ளவர்களால் தாக்கல் செய்யப்பட்டவை என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பொதுக் காப்பாளர் பிரிவின் அலுவலகம் தெரிவிக்கிறது.
உயர்த்தப்பட்டுள்ள மானியம், சட்டப்பூர்வ கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுவதன் மூலம் கிடைக்கும். இந்தக் கட்டணம் $25 முதல் $80 வரைப்பட்டதாக இருக்கும்.
இது ஒருபுறம் இருக்க, இதற்கு மேலாக $75 விண்ணப்பக் கட்டணமும் தள்ளுபடியாகும். இப்போதைய இந்தத் திட்டம் 2026 மார்ச் முடிவு வரை நடப்பில் இருக்கும்.

