சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் 28வது தலைவராக திரு ஜேசன் சான் தாய்-ஹுய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சங்கம் ஞாயிற்றுக்கிழமை அதுகுறித்து அறிவித்தது. திரு ஜேசனின் தலைமைத்துவம் உடனடியாக நடப்புக்கு வருவதாகவும் டிசம்பர் 31ஆம் தேதி வரை அவர் தலைமைப் பொறுப்பில் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சங்கத்தின் 27வது தலைவர் ஏட்ரியன் டான், 57, ஜூலை 8ஆம் தேதி அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து அடுத்த தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது.
புதிய தலைவர் சான் இந்தப் பொறுப்பை ஏற்பதற்கான ஆகச் சிறந்த மனிதர் என்றும் காலஞ்சென்ற திரு டானிற்கு அடுத்து பொறுப்பேற்பதற்குத் தகுதியுள்ளவர் என்றும் சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கிரெகரி விஜயேந்திரன் குறிப்பிட்டார். 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை அவர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.
ஜேசன் இந்தப் பொறுப்பில் தமது தனிப்பட்ட தலைமைத்துவ முத்திரையைப் பதிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.