பெண்கள் மேலும் முன்னேறுவதற்கு நல்ல சட்டங்கள் மட்டும் போதாது. சமூகத்தின் முயற்சியும் அவசியம் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
“சிங்கப்பூரர்கள் வாழ விரும்பும் சமுதாயத்தின் கட்டமைப்பை வடிவமைக்கவும் பெண்களை எவ்வாறு நடத்துவது மற்றும் மதிப்பது என்பதற்கான பொதுவான விதிமுறைகளை உருவாக்கவும் நல்ல சட்டங்கள் தேவை,” என்று வலியுறுத்திய அமைச்சர், பெண்கள் சில சமயங்களில் எதிர்நோக்கும் தடைகள், நடைமுறைகளை ஒரே இரவில் மாற்றிவிட முடியாது என்றார்.
சட்ட சீர்திருத்தங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் அவர் முக்கிய உரை நிகழ்த்தினார்.
“பெண்கள் தொடர்பான பிரச்சினைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பெண்களின் மேம்பாட்டுக்கு ஏற்ற சரியான மனப்போக்கை ஊக்குவிப்பதும் முக்கியம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சமூக மேம்பாட்டு மன்றம், தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் பெண்கள் மற்றும் குடும்பப் பிரிவு ஆகியவற்றின் ஆதரவுடன் லாப நோக்கமற்ற அமைப்பான ‘எஸ்ஜி ஹெர் எம்பவர்மெண்ட்’ மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அமைச்சர் சண்முகம் தனது உரையில் பெண்களின் உரிமைகளை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் சிங்கப்பூரில் பல சட்டங்கள் திருத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

