மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சிங்கப்பூர் முழுவதும் மேற்கொண்ட ஒன்பது நாள் அமலாக்க நடவடிக்கையில் 106 சந்தேகப் பேர்வழிகள் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து $17,200 மதிப்பிலான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
ஜூலை 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பூன்லே, ஜூரோங், செங்காங், தெம்பனிஸ், ஈசூன் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கைது செய்யப்பட்டோரில் ஆக இளையவர் 15 வயதுச் சிறுமி என்று கூறப்பட்டது. இளையர்களும் ஒரு குடும்பமும் இச்சோதனையில் பிடிபட்டதை அமலாக்கப் பிரிவு சுட்டியது.
பெற்றோரும் குடும்ப உறுப்பினர்களும் போதைப்பொருள்களால் விளையும் தீமை குறித்து இளம் வயதிலேயே பிள்ளைகளிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று அது கூறியது.
பிள்ளைகள் யாருடன் அதிக நேரம் செலவிடுகிறார்கள், வெளியில் செல்லும்போதோ வீட்டில் இருக்கும்போதோ அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் போதைப்பொருள்களில் இருந்து விலகி, வாழ்க்கையை முழுமையாக வாழும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று நினைவுறுத்தப்பட்டது.
பிடிபட்டோரிடம் விசாரணை தொடர்கிறது.