பல்வேறு துறைகளில் உள்ள வேலைகளைப் பற்றி தொடக்கப்பள்ளி மாணவர்கள் தெரிந்துகொள்வதற்காக வாய்ப்பளித்தன அண்மையில் நடைபெற்ற சிண்டாவின் தொழில் ஆய்வு முகாம்கள்.
பயோமெடிக்கல் சயின்ஸ் (Biomedical Science), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things) ஆகிய துறைகளில் மொத்தம் இரண்டு முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களின் மூலம் இத்துறைகள் சார்ந்த பணியிடங்களை மாணவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஜூன் மாதம் 11, 12 தேதிகளில் ‘பயோமெடிக்கல் சயின்ஸ்’ முகாமும், ஜூன் 16, 17 தேதிகளில் ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ முகாமும் நடைபெற்றன. ஒவ்வொரு முகாமிலும் 7 வயது முதல் 12 வயது வரையிலான 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர்.
இந்த முகாம்கள் வருங்காலத்தில் மாணவர்கள் தங்களுடைய பணியினை தேர்ந்தெடுப்பதற்கும் அதைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்கும் வெகுவாக உதவின. இத்துறைகள் சார்ந்த வல்லுநர்களிடம் கலந்துரையாடும் வாய்ப்பையும் மாணவர்கள் பெற்றனர்.
பயோமெடிக்கல் சயின்ஸ் முகாமில் இத்துறை பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்வதற்காக ‘லைஃப்லாங் லேர்னிங் இன்ஸ்டிடியூட்’, ‘சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம்’ ஆகியவற்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மேலும் அவர்கள் புதுநீர் வருகையாளர் நிலையத்தையும் பார்வையிட்டதோடு தண்ணீரை சுத்திகரிக்கும் தொழில்நுட்பக்கூறுகளையும் கற்றுக்கொண்டனர்.
அதேபோல் ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ முகாமில் கலந்துகொண்ட மாணவர்கள் ‘இன்டர்நேஷனல் பிளாசா’, ‘லைஃப்லாங் லேர்னிங் இன்ஸ்டிடியூட்’ ஆகிய பணியிடங்களை நேரில் பார்வையிட்டனர். இதில் லைஃப்லாங் லேர்னிங் இன்ஸ்டிடியூட்டில் ஏ*ஸ்டாரின் வல்லுநரின் பகிர்வு அங்கம் மாணவர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் கள நடவடிக்கைகளுக்காக சாங்கி விமான நிலையத்திற்கும் சென்றனர்.
பயோமெடிக்கல் சயின்ஸ் முகாமில் பங்கேற்ற அராஃபத் காசிம் முகமது, 10, “பயோமெடிசன் துறையில் உள்ள பணிகளைப் பற்றிய பல தகவல்களை அறிந்துகொண்டேன். குறிப்பாக ஏ*ஸ்டாரின் பகிர்வு மிகவும் சுவாரசியமாக இருந்தது,” என்று கூறினார்.
‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ முகாமில் பங்குபெற்ற குமரேசன் ஷரன், 10, “முகாம் மிகவும் வேடிக்கையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. இணையத்தின் பண்புகள் மற்றும் அது தொடர்பான தொழில் வாய்ப்புகள் பற்றி அதிகம் கற்றுக்கொண்டேன்,” என்றார்.