சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான அதிவேக ரயில் திட்டம் குறித்து மலேசியாவிடமிருந்து புதிய பரிந்துரை எதுவும் பெறப்படவில்லை என்று தற்காலிக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திரு சீ, புதிய பரிந்துரைகள் வந்தால் நல்ல முறையில் தொடக்கத்திலிருந்து அவை பரிசீலிக்கப்படும் என்றார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட ரயில் திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் விதமாக அண்மையில் பரிந்துரைகளை மலேசியா கோர தொடங்கியது.
ஏற்கெனவே செயல்பட்ட திட்டத்தின்கீழ் மலேசியாவில் ஏழு நிலையங்களும் சிங்கப்பூரில் ரயில்கள் ஜூரோங் ஈஸ்ட்டில் நிறுத்தும் என்றும் இருந்தது. அத்தகைய திட்டமாகவே இருக்குமா என்பதற்குப் பதிலளித்த திரு சீ, பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டபின் அதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.
“சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் பலன் தரும் விதத்தில் வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன என்பதை திறந்த மனப்பான்மையுடன் ஆராய்வோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.