மற்ற முதியவர்களுக்கு உணவு வழங்குவது போன்ற எளிய பணிகளுக்கு முதியவர்கள் ஊதியம் பெற வகைசெய்யும் திட்டம், மேலும் நான்கு துடிப்பான முதுமை நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களிலும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் முதன்முதலில் ஜனவரி மாதம் ‘தே ஹுவா குவான் மோரல்’ அறநிறுவனத்தில் பிடோக் துடிப்பான முதுமை நிலையத்தில் முன்னோட்டமாக இடம்பெற்றது. தற்போது, அந்த அறநிறுவனத்தில் 18 நிலையங்களில் 11 நிலையங்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளன.
இதில் பெரும்பாலும் 60, 70 வயதுகளில் உள்ள ஏறக்குறைய 50 முதியவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இதுவரையில் கிட்டத்தட்ட 200 பயனாளிகளுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அத்துடன் 22,000க்கும் மேற்பட்ட சிறு சிறு வேலைகளை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர். ஒவ்வொரு பணிக்கும் அவர்கள் $1 பெறுகின்றனர்.
தே ஹுவா குவான் மோரல் அறநிறுவனம், ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (ஏஐசி) ஆகியவற்றுடன் இணைந்து மூத்தோருக்கான நிலையம் (சிஎஃப்எஸ்) இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், தே ஹுவா குவான் மோரல் அறநிறுவனத்தின் பிடோக் துடிப்பான முதுமை நிலையத்தின் தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது இத்திட்டத்தை திங்கட்கிழமை தொடங்கிவைத்தார்.
முதியவர்கள், துடிப்பான முதுமைக் காலத்துக்கான நடவடிக்கைகள், நட்பு அல்லது தோழமைத் திட்டங்கள், உடல்நலம் தொடர்பான நடவடிக்கைகள், பராமரிப்பு சேவைகளுக்கான பரிந்துரைகள் போன்ற பல்வேறு சேவைகளை அணுகக்கூடிய இடமாக துடிப்பான முதுமை நிலையம் உள்ளது. குறு வேலைத் திட்டம் இந்நிலையத்தின் அண்மைய முயற்சிகளில் ஒன்றாகும்.
2025ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் இத்தகைய நிலையங்களின் எண்ணிக்கையை 119லிருந்து 220ஆக விரிவுபடுத்த உள்ளது. இது அதிகரித்து வரும் முதியவர்கள் சமூகத்தில் சிறந்த முதுமைக்காலத்தை எட்ட உதவுகிறது.
தனிப்பட்ட முறையில் மருந்து உண்ண நினைவூட்டுவது உள்ளிட்ட குறு வேலைகள் முதியோரின் கருத்துகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. தே ஹுவா குவான் மோரல் அறநிறுவனம் படிப்படியாக அதன் மற்ற ஏழு நிலையங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தும்.
ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்து, லயன்ஸ் பிஃப்ரெண்ட்டர்ஸ் நடத்தும் நான்கு துடிப்பான முதிமை நிலையங்கள் முதியவர்களுக்கு குறு வேலைகளை வழங்கத் தொடங்கியுள்ளன.
லயன்ஸ் பிஃப்ரெண்ட்டர்சின் மற்ற ஆறு நிலையங்களுக்கும் தே ஹுவா குவான் மோரல் அறநிறுவனம், மூத்தோருக்கான நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து அடுத்த இரண்டு மாதங்களில் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் திருவாட்டி கேரன் வீ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
சுத்தம் செய்வது போன்ற, குறிப்பிட்ட நீண்ட நேர வேலைகளைக் குறு வேலைகளாக உள்ளடக்கிய இதேபோன்ற முந்தைய திட்டங்கள் வெற்றிபெறவில்லை என்று அவர் கூறினார்.
இந்த குறு வேலைகள் முதியவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ளன. மேலும் அவர்கள் தங்களுக்கு ஏற்ற நேரத்திலும் வேகத்திலும் வேலை செய்ய முடியும் என்று அவர் மேலும் கூறினார்.
தற்போது, இத்திட்டத்தில் உள்ள அனைத்து பயனாளிகளும் வாடகை வீடுகளில் வசிக்கும் நிதி உதவித் திட்டத்தின் கீழ் உள்ளவர்கள்.
எதிர்காலத்தில், உணவு விநியோகத்தை நாடும் தங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு இந்தத் திட்டம் விரிவடையலாம் என்று திருவாட்டி வீ கூறினார்.
சிங்கப்பூர் முழுவதும் உள்ள அனைத்து நிலையங்களையும் இத்திட்டத்தில் இணைக்க ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, முதியோருக்கான நிலையத்துடன் இணைந்து செயல்படும். மேலும் சிக்கலான வேலைகள் படிப்படியாக திட்டத்தில் சேர்க்கப்படும்.
எடுத்துக்காட்டாக, முதியவர்களே தங்களின் துடிப்பான முதுமை நிலையங்களில் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து நடத்துவது போன்ற கூடுதல் பணிகளை ‘தே ஹுவா குவான் மோரல் அறநிறுவனம் அறிமுகப்படுத்த விரும்புகிறது.
நிலையப் பணியாளர்கள் தங்கள் நேரத்தை மற்ற கடமைகளுக்குச் செலவிடலாம் என்று ‘தே ஹுவா குவான் மோரல் அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜேசன் லீ கூறினார்.
இந்தத் திட்டம் சிங்கப்பூர் பந்தயப்பிடிப்புக் கழகத்தில் சமூக சுகாதார நிதியத்தால் ஆதரிக்கப்படுகிறது, இது சமூக பராமரிப்புத் துறைக்கான புதுமையான திட்டங்களை ஆதரிக்கிறது.
திருவாட்டி பாத்திமா கலிப், 68, ஜனவரி மாதம் இந்த முயற்சியில் இணைந்தார்.
அவர் வாரத்தில் ஐந்து நாள்கள் வேலை செய்கிறார், பிடோக்கில் உள்ள முதியவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு வழங்குகிறார். அவர்கள் தங்கள் மருந்தை உட்கொண்டார்களா என்பதையும் சரிபார்த்து, அவர்கள் அவ்வாறு செய்திருந்தால் ஒரு படிவத்தில் கையொப்பமிடச் செய்கிறார்.
“இதில் நான் ஈட்டும் தொகையில் எனது கைப்பேசி கட்டணத்தைச் செலுத்த முடிகிறது,” என்றார் திருவாட்டி பாத்திமா. அவர் உணவங்காடிக் கடைகளில் உதவியாளராக பணிபுரிவது உட்பட பல்வேறு வேலைகளை அவர் செய்தார்.
திருவாட்டி பாத்திமா, 45 வயதில் கணவரை இழந்தார், ஐந்து குழந்தைகளை தனியாக வளர்த்தார். அவர்கள் அனைவரும் திருமணமாகி சொந்த குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.