சிவப்பு விளக்கை மீறி காரோட்டிச் சென்று, சைக்கிளோட்டிக்கு மரணம் விளைவித்ததாக ‘நியூ உபின்’ உணவு, பானக் குழுமத்தின் இணை நிறுவனர் பாங் செங் பெங்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அந்த விபத்து 2022 மார்ச் 2ஆம் தேதி காலை 9.15 மணியளவில், புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 2 - புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 5 சந்திப்பில் நிகழ்ந்தது.
நடையர்கள் சாலையைக் கடக்கும் பகுதியில் சைக்கிள் ஓட்டிச் சென்ற மியன்மாரைச் சேர்ந்த திரு சிட் ஓ மௌங், 41, மீது திரு பாங்கின் கார் மோதியது.
இவ்வழக்கு தொடர்பில் திரு பாங் புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையானார். வழக்கிற்கு முந்திய கலந்துரையாடல் அக்டோபர் 13ஆம் தேதி இடம்பெறும்.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி, ஒருவர்க்கு மரணம் விளைவித்தால், முதன்முறை அக்குற்றம் புரிவோர்க்கு இரண்டு முதல் எட்டாண்டுகள் வரை சிறை விதிக்கப்படலாம்.
மீண்டும் அதே குற்றம் புரிந்தால் நான்கு முதல் 15 ஆண்டுகள்வரை சிறையில் அடைக்கப்படலாம்.

