மியன்மார் கடற்படையிடம் ‘சோனார்’ எனப்படும் செவியுணரா ஒலிஅலைகளைக் கப்பலிலிருந்து கடலோரத்திற்கும் மற்ற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் நேரத்தை கணக்கிடும் கருவியை விற்றதை சிங்கப்பூரர்கள் இருவர் ஒப்புக்கொண்டனர்.
இதன்மூலம் ஆயுதங்கள் போன்ற முக்கிய கருவிகளை விற்பனை செய்வது குறித்த சட்டத்தை அவர்கள் மீறியிருப்பது தெரியவந்துள்ளது.
தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஹைடிரோனவ் சர்வீசஸ் நிறுவனத்தில் விற்பனை மேலாளரான 57 வயது பொய்ட்டர் அகுஸ் கென்ட்ஜனாவும் அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான 70 வூய் ஓங் சுவானும் ஒப்புக்கொண்டனர்.
இந்த இருவரும் மியன்மார் கடற்படையிடம் விற்பனை செய்த சோனார் கருவி கடற்படுகை தொடர்பான வரைபடத்தை வரைய பயன்படக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டது.
மியன்மார் கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படை ஆய்வுக்காக அக்கருவி விற்கப்பட்டதாக அறியப்படுகிறது.
ஆனால் அது ராணுவ காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று அரசாங்க வழக்கறிஞர்கள் கூறினர்.
குற்றச்சாட்டை எதிர்நோக்கும் இருவருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு $1 மில்லியனுக்கும் அதிகமான அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.
அந்தச் சோனார் கருவி 1.58 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ($2 மில்லியன்) விற்கப்பட்டது.
இந்தோனீசிய நிறுவனமான பினா நுசந்தாரா பெர்காசாவிடம் அந்த சோனார் கருவியை விற்கப்போவதாகக் கூறி நார்வேயைச் சேர்ந்த நிறுவனமான கோங்ஸ்பர்க் மெரிடைமிடமிருந்து பொய்ட்டரும் வூயும் அதை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
அதற்கு முன்பு மியன்மார் கடற்படையிடம் அதை விற்கப்போவதாக இருமுறை விண்ணப்பம் செய்திருந்தபோது அந்த விண்ணப்பங்களை அந்த நார்வே நிறுவனம் ஏற்க மறுத்தது.
அந்த சோனார் கருவி 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி நார்வேயிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தது.
பிறகு அதே மாதம் 20ஆம் தேதியன்று அது சிங்கப்பூரிலிருந்து மியன்மாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.