பல பூனைகளைக் கொன்று சில குடியிருப்பாளர்களிடம் மூர்க்கமாக நடந்துகொண்டதாக நம்பப்படும் இரண்டு தெருநாய்களை விலங்குநல மருத்துவச் சேவை பிடித்துள்ளது.
செங்காங்கில் உள்ள ஃபர்ன்வேல் லேன் பகுதியில் அந்த இரண்டு நாய்களும் வெள்ளிக்கிழமையன்று பிடிபட்டன. அவை, அங் மோ கியோ உள்ளிட்ட வட்டாரங்களில் பல பூனைகளைத் தாக்கிய மூன்று நாய்கள் உள்ள கும்பலைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகிறது.
இந்த நாய்க் கும்பல் 30 பூனைகளைத் தாக்கிக் கொன்றதாக பூனைகளுக்கு உணவு ஊட்டும் பிரியர்கள் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தெரிவித்தனர். அங் மோ கியோ, சிராங்கூன் நார்த், ஜாலான் காயு ஆகிய இடங்களில் அந்நாய்கள் தென்பட்டன.
அதன்பின், பாய லேபார் போன்ற மிகுந்த தொலைவில் உள்ள பகுதிகளுக்கும் அவை சென்றதாக பூனைப் பிரியர்கள் குறிப்பிட்டனர். மொத்தம் 50 பூனைகள் கொல்லப்பட்டிருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர்.
விலங்குநல மருத்துவச் சேவை விரைவில் நடவடிக்கை எடுக்காததால் அதிகமான பூனைகள் மாண்டதாகவும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்குப் பங்கம் வந்ததாகவும் பூனைப் பிரியர்களில் ஒருவர் கூறினார். இந்த நாய்கள் பல குடியிருப்பாளர்களைத் துரத்தியதாகவும் அவர் சொன்னார்.
மனிதர்கள் தாக்கப்படும் வரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியன்று என்று வேறொரு பூனைப் பிரியர் வருத்தம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தங்களுக்குத் தெரிந்திருந்தது என்றும் நாய்களைப் பிடிக்க பொறிகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் விலங்குநல மருத்துவச் சேவை தெரிவித்தது. எனினும், நாய்களை எளிதில் பிடிக்க முடியவில்லை என்பதையும் அது சுட்டியது.