சிங்கப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவிலான டெங்கித் தொற்றை ஏற்படுத்திய டென்வி-1 வகை கிருமி மீண்டும் தலைதூக்கி உள்ளது.
இவ்வகை டெங்கி கிருமிப் பரவலை எதிர்கொள்ள மக்களிடைய இருக்கும் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் குறைந்திருப்பதால் அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்.
இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து சிங்கப்பூரின் சில பகுதிகளில் டென்வி-1 வகை கிருமி பரவி வருவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. அதனால் டெங்கித் தொற்று அதிகரிக்கலாம் என்று வாரியம் எச்சரிக்கிறது.
முன்னதாக அதிகம் இல்லாதிருந்த டென்வி-1 கிருமிப் பரவல் இப்போது அதிகம் காணப்படுகிறது; ஏடிஸ் ஏகிப்டி வகை கொசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்நிலை உருவெடுத்துள்ளது என்றும் ஆண்டிறுதியில் கிருமித்தொற்று அதிகமாகப் பதிவாகலாம் என்றும் வாரியம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.
எல் நினோ பருவநிலை முறையால் வரும் மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்றும் வாரியம் குறிப்பிட்டது. கொசுக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அது அனைவரையும் கேட்டுக்கொண்டது.
ஆகக் கடைசி நிலவரப்படி 2023ஆம் ஆண்டில் இதுவரை 6,680 பேர் டெங்கி தொற்றால் பாதிக்கப்பட்டதாகப் பதிவாகியுள்ளது. வரலாறு காணாத அளவில் 2020ஆம் ஆண்டில் 35,315 தொற்றுச் சம்பவங்களும் 2022ஆம் ஆண்டில் 32,325 தொற்றுச் சம்பவங்களும் பதிவாகின.
இவ்வாண்டு இதுவரை பதிவான எண்ணிக்கை அதைவிடக் கணிசமாகக் குறைவு. எனினும், பொதுவாக பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு டென்வி-1 வகை கிருமி அதிகம் பரவுவது வழக்கமாக இருப்பதால் நிலைமை மோசமடையக்கூடும் என்று அஞ்சப்படுவதாக வாரியம் சொன்னது.