தமிழில் அழகாகக் கட்டுரை எழுதுவதற்கான பயிலரங்கு

தமிழில் அழகாகக் கட்டுரை எழுதுவதற்கான பயிலரங்கு

3 mins read
fc6d3a5b-f126-49aa-b8e9-f24ace7f7145
தொண்டூழியர்கள் திரு.மணிகண்டன், செல்வி. தென்னவி, திருவாட்டி சுடர்மொழியுடன், ஏற்பாட்டாளர் திரு. கல்யாண், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் திரு. தனபால் குமார், பயிலரங்கை வழிநடத்திய திருவாட்டி நபிலா நஸ்ரின் - படம்: லாவண்யா வீரராகவன்

அடுத்த தலைமுறையினரிடம் தமிழ் மொழியைக் கொண்டு சேர்ப்பது வீட்டில்தான் தொடங்குகிறது,” என்கிறார் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார்.

மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்ட, தொடக்க நிலை மாணவர்களுக்கான தமிழ்க் கட்டுரைகளை எழுதக் கற்றுத்தரும் பயிலரங்கு கடந்த செப்டம்பர் 10 ஆம் நாள் உட்லண்ட்ஸ் நூலகத்தில் நடைபெற்றது.

தமிழ் இளையர் விழா 2023ன் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘அழகான தமிழ் கட்டுரை எழுதும் பயிலரங்கில்’ ஏறத்தாழ 150 பேர் கலந்து கொண்டனர்.

ஆர்வத்துடன் படம் பார்த்து கட்டுரை எழுதும் மாணவர்கள்.
ஆர்வத்துடன் படம் பார்த்து கட்டுரை எழுதும் மாணவர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

படங்களைப் பார்த்து கற்பனையாக முன்னுரை, முடிவுரை எழுதுதல், எழுத்துப்பிழை கண்டுபிடித்தல், சொற்றொடர் அமைத்தல், கதையின் மூலம் கற்றுக்கொண்ட நீதியை விளக்குதல் எனப் பலவற்றையும் மாணவர்களுடன் நயமாகப் பகிர்ந்துகொண்டார்.

- படம்: லாவண்யா வீரராகவன்

இறுதியில் மாணவர்களுக்கு கட்டுரை எழுதும் பயிற்சியும் வழங்கப்பட்டு, அவர்கள் எழுதியவற்றையும் சரிபார்த்ததோடு மேம்படுத்தும் வழிகளும் சொல்லிக் கொடுக்கப்பட்டன.

கடந்த மூன்று ஆண்டுகளாக இணையவழியில் நடத்தப்பட்ட இப்பயிலரங்கு, இவ்வாண்டு முதன்முறையாக நேரடி வகுப்பாக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திரு. தனபால் குமார் கூறுகையில், “இந்தப் பயிலரங்கில் விடுமுறை நாளிலும் திரளான மாணவர்கள் கலந்துகொண்டது உற்சாகமூட்டுகிறது,” என்றார்.

அவர், “மாணவர்களின் 21ஆம் நூற்றாண்டின் முக்கிய திறன்களில் படைப்பாற்றலும் ஒன்று. எழுத்துப் படைப்பை, குறிப்பாக தாய்மொழியில் சிந்தனை செய்து, எழுத பயிற்றுவிப்பது, குழு மனப்பான்மையை உருவாக்குவது, புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வது என அனைத்திற்குமான வாய்ப்பாக இந்த பயிலரங்கு அமைந்துள்ளது மகிழ்ச்சி,” எனவும் தெரிவித்தார்.

இப்பயிலரங்கை வழிநடத்திய நபிலா நஸ்ரின் கூறுகையில், “எனக்கு தமிழ்மொழி பயிற்றுவிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு.

“அதனால்தான் வேதியியல் துறையில் ஆராய்ச்சியாளராக இருந்தாலும், வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம், பகுதிநேரமாக பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் சொல்லித்தருவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறேன்,” என்றார்.

மேலும், “இம்முறை நேரடி வகுப்பாக நடத்தப்பட்ட இது மிகச் சிறப்பாக நடந்திருப்பது பெருமை,” என்றார்.

இப்பயிலரங்கிற்கு வந்திருந்த பெற்றோரான திரு அறிவொளி, 42, “என் மகள் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் படிக்கிறார். அவர் அதிக மதிப்பெண் வாங்குவது தமிழ்ப் பாடத்தில்தான்.

“அவருக்கு தமிழ் மீது ஆர்வம் இருப்பதால், இந்த பயிலரங்கு அவளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர் கல்யாண் கூறுகையில், “ஒரு மாணவரின் கேள்வி, மற்றொரு மாணவரின் சிந்தனையைத் தூண்டும். இப்படியாக ஒருவித ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தோற்றுவிப்பதை இப்பயிலரங்கு உறுதி செய்துள்ளது,” என்றார்.

தொடர்ந்து அவர், இந்தியன் டாட் எஸ்ஜி, ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, வளர்தமிழ் இயக்கம், தேசிய நூலக வாரியம் உள்ளிட்டவற்றின் ஆதரவுடனும், தொண்டூழியர்கள் திருவாட்டி சுடர்மொழி, திருவாட்டி நபிலா நஸ்ரின், திரு மணிகண்டன், செல்வி தென்னவி உள்ளிட்டோரின் உழைப்பாலும் சாத்தியமானது,” என்று குறிப்பிட்டார்.

இப்பயிலரங்கில், எழுத்துப் பயிற்சி கொடுக்கப்பட்டதோடு, கட்டுரை எழுதும் முறை, மாதிரிக் கட்டுரைகள், சொற்பொருள், கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியக் கருத்துகள் என அனைத்தும் நிறைந்த கையேடு ஒன்று வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்