தென்கிழக்கு வட்டார மாணவர்கள் $2 மில்லியனுக்குமேல் மதிப்புள்ள செயல்திட்டங்கள்வழி பயனடையவுள்ளனர். கல்வி, மனநலம், சுற்றுப்புறம் ஆகிய கூறுகளைச் சார்ந்த மூன்று முக்கிய திட்டங்களை புதன்கிழமை (செப்டம்பர் 20) தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி) அறிவித்தது.
‘செலிபிரேட்டிங் கனெக்ஷன்ஸ்’ தென்கிழக்கு ‘சிடிசி’ வட்டாரக் கருத்தரங்கில் அறிவிக்கப்பட்ட இம்முயற்சிகள், அடுத்த தலைமுறையினரை உருவாக்குவதில் தென்கிழக்கு சிடிசியின் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்துகின்றன.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக துணைப் பிரதமரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹெங் சுவீ கியட் பங்கேற்றார்.
இத்திட்டங்களில் முதலாவது, தென்கிழக்கு ‘எடுகேர்’ நிதி. தென்கிழக்கு வட்டாரத்தில், குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு தகுந்த ஆதரவை வழங்கி விலைவாசி உயர்வைச் சமாளிக்க இந்நிதி உதவும்.
இதன்கீழ், பள்ளி செல்லும் மாணவர்களைக் கொண்ட, $800-$1000 தனிநபர் வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்குதொகையாக ஒருமுறை மட்டும் $300 அளிக்கப்படும்.
இந்நிதியைப் பெற, குடும்பத்தில் ஒரு பிள்ளையாவது 2024ல் 7 முதல் 16 வயது நிரம்பிய, பள்ளி செல்லும் மாணவராக இருக்கவேண்டும். 16 வயதுக்கு மேற்பட்டால், அவர் உயர்நிலைப் பள்ளி மாணவர் என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
குடும்பங்கள் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ‘ஃபார்ம்எஸ்ஜி’ வழியாகவோ தென்கிழக்கு சிடிசியிடம் படிவத்தைப் பெற்றோ விண்ணப்பிக்கலாம்.
இந்த ஒரு மில்லியன் வெள்ளி நிதி, வசதி குறைந்த மாணவர்களின் பள்ளித் தேவைகளைப் பூர்த்திசெய்து, பொருளாதாரக் கவலைகள் இன்றி படிப்பில் கவனம் செலுத்த உதவும்.
இரண்டாவதாக, மனநலத்தின் முக்கியத்துவம் கருதி மனநலம் சார்ந்த முயற்சிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ‘சீட்ஸ் ஆஃப் வெல்னெஸ்’ செயல்திட்டத்தை தென்கிழக்கு ‘சிடிசி’ அறிவித்தது.
தென்கிழக்கு வட்டாரத்தில் வசிப்போரில் பெரும்பாலோர் முதியோரும் இளையரும் என்பதால் இரு பிரிவினரையும் இத்திட்டம் ஆதரிக்கும்.
2021ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, 2022ல் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்கள் 25.9% உயர்ந்ததாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தகவல் வெளியிட்டிருந்தது.
குறிப்பாக இளையர்களும் முதியோருமே இவற்றில் அதிகம் பாதிக்கப்பட்டனர். இத்தகைய சம்பவங்களைத் தடுக்க ‘சீட்ஸ் ஆஃப் வெல்னெஸ்’ திட்டம் உதவும்.
இத்திட்டத்தின்வழி, மனநலம் சார்ந்த முயற்சிகளை ஏற்பாடு செய்யவிரும்பும் பள்ளிகளும் சமூக அமைப்புகளும் சமூக மனநல உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு விண்ணப்பத்திற்கு அதிகபட்சம் $5000 வழங்கப்படும்.
மேலும், தென்கிழக்கு வட்டாரப் பள்ளிகள் மாணவர்களை நாடக இசை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
பொதுமக்களுக்கு மனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
இந்த இசைநிகழ்ச்சிகளையும் நாடகங்களையும் காண வருவோருக்கு சுய உதவிக் குறிப்புகளும் வழங்கப்படும்.
மூன்றாவதாக, சுற்றுப்புறத்தை மையமாகக் கொண்ட ‘வோர்மரி’ செயல்திட்டம்.
சிங்கப்பூரின் மொத்த கழிவுப்பொருள்களில் 12% உணவுக் கழிவுகள் என தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியுள்ளது. உணவுக் கழிவு பிரச்சினையைச் சமாளிக்க புழுக்களை பயன்படுத்தும் இம்முயற்சி தென்கிழக்கு வட்டார பள்ளி மற்றும் சமூகத் தோட்டங்களில் தொடங்கும்.
ஒவ்வொரு தோட்டத்திற்கும் புழுக்கள் கொண்ட இரு புழுத் தொட்டிகள் வழங்கப்படும். ‘ஐடிஇ’ கிழக்கு வட்டாரக் கல்லூரி உதவியுடன் புழுத்தொட்டியைப் பராமரிப்பது குறித்த பயிலரங்குகளும் நடைபெறும்.
‘செலிபிரேட்டிங் கனெக்ஷன்ஸ்’ நிகழ்ச்சியில் கடந்த 14 ஆண்டுகளாக வட்டார மன்ற உறுப்பினராக சேவையாற்றியுள்ள திரு சி. யோகீஸ்வரன், 62, மூன்று-ஆண்டுத் தவணைக்கு மீண்டும் பதவியேற்றார்.