மின்சார வாகனங்களை விரைவிலேயே பயன்படுத்தத் தொடங்குமாறு ஊக்குவிக்கும் திட்டம் (இவி எர்லி எடாப்ஷன் ஸ்கீம்) 2025ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்கு வழங்கப்படவிருக்கும் அதிகபட்ச விலைக் கழிவு குறைக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகன ஊக்குவிப்புத் திட்டம் 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிவரை ஈராண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.
இதன்கீழ் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், டாக்சிகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் கூடுதல் பதிவுக் கட்டணத்தில் 45 விழுக்காடு வரை விலைக் கழிவு பெறுவர். எனினும், அந்த விலைக் கழிவு அதிகபட்சமாக 15,000 வெள்ளிக்குக் குறைக்கப்படுகிறது.
தற்போது விலைக் கழிவு அதிகபட்சமாக 20,000 வெள்ளியாக உள்ளது.
இந்நடவடிக்கை, மின்சார வாகனங்களுக்கு மாறிக்கொள்ளப் பலரை ஊக்குவிக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அதேவேளையில் மின்சார வாகன ஊக்குவிப்புத் திட்டத்தில் படிப்படியாக மாற்றங்கள் கொண்டுவரப்படுவது உறுதிசெய்யப்பட்டு வருவதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.
மின்சார வாகன ஊக்குவிப்புத் திட்டம் 2020ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இத்திட்டம் நடப்புக்கு வந்தது.
இவ்வாண்டு டிசம்பர் மாதம் திட்டம் நிறைவடையவிருந்தது.
இந்நிலையில், ஏ1 பிரிவில் அடங்கும் மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கான தேசிய சுற்றுப்புற அமைப்பின் வாகன வாயு வெளியேற்றத் திட்டத்தின்கீழ் (விஹிக்கியுலர் எமிஷன்ஸ் ஸ்கீம்) வழங்கப்படும் அதிகபட்ச விலைக் கழிவில் மாற்றம் இருக்காது. இதன்படி 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் டிசம்பர் மாதக்கும் இடைப்பட்ட காலத்தில் அதிபட்ச விலைக் கழிவு தொடர்ந்து 25,000 வெள்ளியாக இருக்கும்.
எனினும், ஏ2 பிரிவில் அடங்கும் மின்சார வாகனங்களுக்கான அதிபட்ச விலைக் கழிவு 15,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளிக்குக் குறைக்கப்படுகிறது.