தீமிதித் திருவிழாவுக்கும் அதற்கு முந்தைய நேர்த்திக்கடன்களான பால்குடம், மாவிளக்கு,
அங்கப்பிரதட்சணம், கும்பிடுதண்டம், ஆகியவற்றுக்கும் இணையப் பதிவு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கவிருக்கிறது.
நவம்பர் மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தீமிதித் திருவிழா சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறவிருக்கிறது. எந்த நேர்த்திக்கடனுக்கும் நேரடிப் பதிவு கிடையாது.
அனைத்து பங்கேற்புப் பதிவுகளும் இணையம் வழிதான் செய்யப்பட வேண்டும். பதிவை உறுதிசெய்யும் செய்தி அவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
பதிவுக்கான மின்னியல் கட்டணத் தெரிவுகள் இணையத்தில் தெரிவிக்கப்படும். இணையம் வழி கட்டணம் செலுத்துதல் நிறைவேற்றப்பட்டால், அந்தக் குறிப்பிட்ட நேர்த்திக்கடனுக்கான பதிவு வெற்றிகரமாக நடந்தேறியது என எடுத்துக்கொள்ளலாம்.
பக்தர்கள் தங்கள் பதிவுகளை https://heb.org.sg/fw2023 எனும் இணைய முகவரி மூலம் செய்யலாம். பதிவு நவம்பர் 4ஆம் தேதி சனிக்கிழமை முடிவுறும்.
பதிவை உறுதி செய்வதற்கு முன், பக்தர்கள் நிகழ்ச்சி நடைபெறும் தேதி, நேரம், இடம் போன்ற விவரங்களைக் கவனமாகப் பரிசீலித்த பிறகு பதிவை உறுதி செய்யுமாறு இந்து அறக்கட்டளை வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டது. பதிவை உறுதி செய்தபிறகு, அதில் மாற்றங்கள் செய்ய முடியாது என்று அது கூறியது.
நேர்த்திக்கடன்களைச் செலுத்த பக்தர்கள் சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கோ, சிராங்கூன் ரோட்டில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கோ செல்லும்போது தங்களிடம் உள்ள மின்னியல் பதிவை உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தியை அல்லது மின்னஞ்சலை அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.
பக்தர்கள் அனைவரும் அவர்களின் நேர்த்திக்கடன்கள் தொடங்குவதற்கு 30 நிமிடத்திற்கு
முன்னதாகவே ஆலயத்தில் இருக்க வேண்டும். நேர்த்திக்கடன்கள் தொடங்குவதற்கு முன் வெகு சீக்கிரமாக வருவோரும் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும், 16 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட தீமிதிக்கும் பக்தர்கள், அக்டோபர் 29ஆம் தேதிக்கு முன், தங்கள் அடையாளத்தை உறுதிசெய்ய, பெற்றோருடன் அல்லது சட்டபூர்வமான பராமரிப்பாளருடன் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குச் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். இரவு 7 மணி முதல் 9 மணி வரை இந்தச் சேவை செயல்படும்.
கங்கணம் கட்டுதல், தீமித்தல்
தீமிதித்தல் நாளான நவம்பர் 5ஆம் தேதி, தீமிதிக்கும் எல்லா ஆண் பக்தர்களும் தங்கள் பாத ஊர்வலத்தை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து தொடங்குவார்கள்.
திமிதிக்கும் ஆண் பக்தர்களுக்கான கைப்பட்டையும் கங்கணமும் அன்றைய தினம் மாலை 4 மணி, மாலை 5 மணி, மாலை 6 மணி, இரவு 7 மணி, இரவு 8 மணி ஆகிய நேரங்களில் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் மட்டும் கட்டப்படும்.
தீமிதித் திருவிழா 2023க்கான அதிகாரபூர்வ பாத ஊர்வலப் பாதையில் ஆண் பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கால அட்டவணையின்படி நடந்துசெல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
தீக்குழியைச் சுற்றும் நேர்த்திக்கடனைச் செலுத்தும் பெண் பக்தர்களுக்கான கைப்பட்டையும் கங்கணமும் நவம்பர் 5ஆம் தேதி இரவு 11 மணி, நள்ளிரவு 12 மணி, பின்னிரவு 1 மணி ஆகிய நேரங்களில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் கட்டப்படும்.
பால்குடம், கும்பிடுதண்டம், அங்கப்பிரதட்சணம்
பால்குடம், கும்பிடுதண்டம், அங்கப்பிரதட்சணம் ஆகிய நேர்த்திக்கடன்களைச் செல்லும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்கள் தொடங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன்னதாகவே ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் இருக்க வேண்டும்.
நேர்த்திக்கடன்களுக்கான பால்குடங்களையும் மாவிளக்குகளையும் ஸ்ரீ மாரியம்மன் கோயிலே வழங்கும். சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட பால்குடங்களை எடுக்கவிரும்பும் பக்தர்கள் அவற்றை வீட்டிலேயே தயார்செய்து ஆலயத்துக்குக் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தீமிதித் நிகழ்வுகளின் நேரலை
தீமிதித் திருவிழா தொடர்பான நிகழ்வுகளின் நேரலையைக் காண, இந்து அறக்கட்டளை வாரியத்தின் யூடியூப், ஃபேஸ்புக் தளத்தை நாடலாம்.
இணையத்தளம்: https://heb.org.sg/fw2023/ ;
ஃபேஸ்புக்: https://www.facebook.com/hinduendowmentsboard ;
யூடியூப்: https://youtube.com/hinduendowmentsboard
தீமிதித் திருவிழா தொடர்பான மேல் விவரங்களுக்கு 6223 4064 எனும் எண்ணில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலைத் தொடர்புகொள்ளலாம்.