தாய்மொழி கற்றல் மகிழ்வூட்டும் அனுபவமாக இருக்க வேண்டும் என்றும் அன்றாட வாழ்வியல் நடைமுறைகளை ஒத்த கற்றலாக இருக்க வேண்டும் என்றும் கூறினார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் ஆசிரியர் தின விருந்து நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிபர் தர்மன், அனைத்துலக அளவில் சிங்கப்பூரின் தமிழ்மொழி கற்றலை சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் நிலைநிறுத்தியிருக்கிறது என்றும் இதை அடைவதில் இருந்த சவால்களை வாய்ப்புகளாக பயன்படுத்தி சங்கம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்றும் இவர் புகழாரம் சூட்டினார்.
சங்கத்தை வழிநடத்தி சென்ற முன்னோடி தமிழாசிரியர்களுக்கும் இவர் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்தார்.
அடுத்த 20 ஆண்டுகளுக்கு பிறகும் பல்லின சமூகமான சிங்கப்பூரின் துடிப்பானதொரு அடையாளமாக தமிழ்மொழி திகழும் என்று குறிப்பிட்ட இவர், எளிமையான, மகிழ்ச்சியான முறையில் மொழியினை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
21ஆம் நூற்றாண்டு இளையர்களுக்கு இருக்கும் திறன் சார்ந்த சவால்களுக்கு மத்தியில் அவர்கள் விரும்பும் வகையில் புத்தாக்க முயற்சிகள் மூலம் கற்றல் அனுபவத்தை சுவாரசியமானதாக்க ஆசிரியர்கள் முனைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இல்லங்களில் குறைந்துவரும் தாய்மொழி பயன்பாடு அனைத்து தாய்மொழிகளுக்குமே இருக்கும் ஒரு மிகப்பெரிய சவால் என்று குறிப்பிட்ட இவர், தாய்மொழியைக் கற்பது மிக இளம் வயதிலிருந்தே தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இளம் வயதிலேயே தாய்மொழி கற்றலை பிள்ளைகளிடம் கொண்டுசெல்வதில் பாலர்பள்ளி ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது. இன்னும் பல ஆசிரியர்களையும் தமிழாசிரியர் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ளலாம் என்று திரு தர்மன் கருத்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், “பாலர்பள்ளி தொடங்கி அனைத்து நிலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலனிலும் மேம்பாட்டிலும் தமிழாசிரியர் சங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது உருவாகியிருக்கும் புதிய செயலவையில் இளம்வயது ஆசிரியர்களும் இடம்பெற்றிருப்பது பரந்துபட்ட கண்ணோட்டத்தை அளிப்பதோடு வளர்ச்சி பாதையில் தொடரவும் வழிவகுக்கும்“ என்று கூறினார்.
சனிக்கிழமை ஹோம்டீம் என்எஸ்@ காத்திப் மன்ற உள்ளரங்கில் மாலை 6.30 மணிமுதல் நடைபெற்ற இவ்விருந்து நிகழ்வில் பாரம்பரிய நடனம், திரையிசைப் பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் மொழிசார் விளையாட்டுகளும் இடம்பெற்றன. நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான விக்ரம் நாயர், 470 தமிழாசிரியர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், பங்காளிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தமிழாசிரியர்களின் வளர்ச்சிக்கும் தமிழ்மொழி கல்வியின் மேம்பாட்டிற்கும் பல்வேறு வகையான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறது என்று கூறினார் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார்.
2005ஆம் ஆண்டு முதல் தமிழ் இலக்கியத்தில் சிங்கப்பூரிலேயே பட்டக் கல்வியை மேற்கொள்ளும் வசதி கொண்டுவரப்பட்டது திரு தர்மன் கல்வி அமைச்சராக இருந்த காலத்திலே என்று குறிப்பிட்ட திரு தனபால், அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அவர் கலந்துகொள்ளும் முதல் தமிழ் நிகழ்வு இது என்பதில் கூடுதல் பெருமை என்றும் தெரிவித்தார்.
மேலும் 1992ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உலகத் தமிழாசிரியர் மாநாட்டை தமிழாசிரியர் சங்கம் எடுத்து நடத்தியது போன்ற பல்வேறு மொழிசார் மைல்கற்களை இச்சங்கம் தொடர்ந்து செயல்படுத்தி வருவதையும் திரு தனபால் குமார் குறிப்பிட்டார்.