கர்ப்பிணிகளின் மனநலத்துக்கு ஆதரவு வழங்கும் ‘பிராம்’ எனப்படும் கர்ப்பகால உளவியல் மீள்திறன் பரிசோதனைத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக கேகே மகளிர், சிறார் மருத்துவமனை கூறியுள்ளது.
அந்த மருத்துவமனையில் வெளிநோயாளி சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு உதவும் நோக்கில் இத்திட்டம், டிசம்பர் 2022ல் அறிமுகம் செய்யப்பட்டது.
அதிலிருந்து 1,300க்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் கர்ப்பகால உளவியல் மீள்திறன் பரிசோதனையைச் செய்துகொண்டனர். அவர்களில் எட்டு விழுக்காட்டுக்கு மேற்பட்டோரிடம் குறிப்பிடத்தக்க வகையில் உளச்சோர்வுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக மருத்துவமனை கூறியது.
இத்திட்டத்தின்கீழ், கர்ப்பகாலத்தின் இரண்டாம் காலாண்டில் உளவியல் பரிசோதனை நடத்தப்படும். கர்ப்பிணிகளின் வசதியையும் கர்ப்பகாலத்தில் இது நிலையான பருவம் என்பதையும் கருத்தில்கொண்டு இந்தக் காலகட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பகாலத்தின் முதல் காலாண்டில் கருச்சிதைவுக்கான வாய்ப்புகள் உண்டு. மூன்றாம் காலாண்டில் மகப்பேறு தொடர்பான இதர அம்சங்களில் கர்ப்பிணிகள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இரண்டாம் காலாண்டில் பெரும்பாலான கர்ப்பிணிகள் உடல்ரீதியாக நலமாக இருப்பதாக உணர்வர் என்பதை மருத்துவர்கள் சுட்டினர்.
கர்ப்பகால உளவியல் மீள்திறன் பரிசோதனையின்கீழ், கர்ப்பிணிகள் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவர்.
‘இபிடிஎஸ்’ எனப்படும் எடின்பரோ பிரசவத்திற்குப் பிந்திய மனச்சோர்வு அளவுகோலின் அடிப்படையிலான கேள்விகள் அவை.
வருத்தம், கவலை, உணர்ச்சிவயப்படுதல், தூக்கமின்மை, தன்னையே காயப்படுத்திக்கொள்ளுதல் தொடர்பான சிந்தனை போன்றவை தொடர்பில் அக்கேள்விகள் அமைந்திருக்கும்.
கர்ப்பிணிகள் அளிக்கும் பதில்கள் மதிப்பீடு செய்யப்படும். அதிக மதிப்பெண்கள் பெற்ற கர்ப்பிணிகள் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பொருள். அவர்கள் மனநல மருத்துவரைச் சந்திக்கவும் தனிப்பட்ட கவனிப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
மனச்சோர்வுக்கான வாய்ப்பு அதிகமிருப்பதாகக் கருதப்படுவோருக்கு தொலைபேசி வழியாக மனநல ஆலோசகர் ஆதரவு வழங்குவார்.
கர்ப்பகால மனச்சோர்வைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் பிரசவத்திற்குப் பிந்திய மனச்சோர்வுக்கான வாய்ப்பு மிக அதிகம். மேலும் பிறக்கவிருக்கும் குழந்தையையும் அது பல்வேறு வகைகளில் பாதிக்கும் என்பதை மருத்துவர்கள் சுட்டினர்.
மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள், முறையாக சாப்பிடவோ ஓய்வெடுக்கவோ மாட்டார்கள். மனச்சோர்வைச் சமாளிக்க சிலர் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற ஆரோக்கியமற்ற வழிகளையும் நாடக்கூடும். இதனால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு உறவுகளில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்புண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.
கொவிட்-19 கிருமிப் பரவலின்போது பிரசவத்திற்குப் பிந்திய மனச்சோர்வு அடையாளம் காணப்பட்டோர் விகிதம் 47 விழுக்காடு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
கர்ப்பகால மனச்சோர்வுக்கு மருத்துவரீதியாகத் தீர்வுகாண இயலும் என்று கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சுவா ட்ஸி எர்ன் கூறினார்.
கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே இதுபற்றிய விழிப்புணர்வு இருந்தால் பிரசவத்திற்கு முன்னும் பின்னும் ஏற்படக்கூடிய மனச்சோர்வால் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைத் தவிர்க்கலாம் என்றார் அவர்.