சிங்கப்பூரில் 2021ல் கொவிட்-19 தலைவிரித்து ஆடியபோது நடப்பில் இருந்த சமூக இடைவெளி விதியை உறுதிப்படுத்தும் அதிகாரி, பிரிட்டனைச் சேர்ந்த கிளைவ் ஆன்ஸ்லே ரிஃபின் என்ற ஆடவரிடம் முகக்கவசத்தை அணிந்துகொள்ளும்படி கூறினார்.
ஆனால் அப்படி சொல்வது ‘ஒடுக்குமுறை’ என்று சொல்லி அதை அணிந்துகொள்ள அந்தப் பிரிட்டிஷ்காரர் மறுத்துவிட்டார்.
கிளைவ் ஆன்ஸ்லே ரிஃபின் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்குப் புதன்கிழமை மாவட்ட நீதிமன்றம் $1,200 அபராதம் விதித்தது.
பொது இடத்தில் தொல்லை விளைவித்ததாகக் கூறும் வேறு ஒரு குற்றச்சாட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்த ஆடவரும் அவரின் மனைவியும் மரினா பே சேண்ட்சில் 2021 செப்டம்பர் மாதம் பிரச்சினையைக் கிளப்பிய சம்பவம் தொடர்ச்சியான பல காணொளிகளில் படம் பிடிக்கப்பட்டு சமூக ஊடகத்தில் பரவியது.
ஒரு கட்டத்தில் அந்த ஆடவரின் மனைவி அதிகாரியின் முகக்கவசத்தைப் பிடித்து இழுத்ததையும் காணொளிகளில் பார்க்க முடிந்தது.
ஆடவரின் மனைவியான கிளேரியல் ரிஃபின் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அந்த மாதின் வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடல் நவம்பர் 3ஆம் தேதி நடக்கும்.