தீங்குநிரல் தொடர்பில் அறுவர்மீது குற்றச்சாட்டு

தீங்குநிரல் தொடர்பில் அறுவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
56888157-8cc5-4e8b-99e3-a38fac743475
இந்த விவகாரத்தின் தொடர்பில் காவல்துறை நடத்திய சோதனையில் 13,000 வெள்ளிக்கும் மேற்பட்ட ரொக்கம், மடிக்கணினிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

அண்மைக் காலமாக சிங்கப்பூரில் தலைதூக்கியுள்ள வங்கிகள் சம்பந்தப்பட்ட தீங்குநிரல் விவகாரங்களுடன் தொடர்பிருப்பதாக நம்பப்படும் ஆறு ஆடவர்கள் மீது வெள்ளிக்கிழமையன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

தவறான வழிகளில் பிறர் பெற்ற பொருள்களைக் கையாண்டதன் தொடர்பில் அவர்களில் ஒவ்வொருவர் மீதும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதில் ஈடுபடும் ஒரு கும்பலுடனும் அவர்களுக்குத் தொடர்பு உள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அறுவரில் ஒருவரான 30 வயது எர்னஸ்ட் இயோ வெய் ஜியே, தானியக்க வங்கி இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்குமாறு முகம்மது காய்ர் ஃபாரிஷ் காலிட், ஜேர்டன் சியா ஜியே என், முகம்மது நூர் டேனியல் ஜமாலுதீன் ஆகிய மூவருக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த மூவர் ஆளுக்கு 2,000லிருந்து 9,000 வெள்ளி ரொக்கம் எடுத்துக்கொண்டதாக நம்பப்படுகிறது. அதற்குப் பிறகு காய்ர், 20, சியா, 21, நூர், 28, மூவரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பணத்தை இயோவிடம் ஒப்படைத்ததாகச் சொல்லப்படுகிறது.

‘ரிட்டெய்ல் பேரடைஸ்’ என்ற நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த இயோ, செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று ‘டிவை’ என்றழைக்கப்பட்ட ஒருவர் கூறியதற்கு ஏற்ப 13,800 வெள்ளியைத் தானியக்க வங்கி இயந்திரத்திலிருந்து எடுத்ததாகக் கருதப்படுகிறது. பின்னர் அந்தத் தொகையை அவர் அடையாளம் தெரிவிக்கப்படாத ஒருவரிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இதேபோன்ற குற்றங்களைப் புரிந்ததாக நம்ப்படும் 36 வயது கேப்ரியல் கோக் கென் ஃபூன், 23 வயது எடி சாங் யோங் செங் ஆகியோர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மற்ற இருவர்.

குறிப்புச் சொற்கள்