கிராஞ்சி பெருவிரைவு ரயில் நிலையத்திலிருந்து கிராஞ்சி வே வட்டாரத்தில் உள்ள தங்களின் தங்குவிடுதிகளுக்குச் செல்ல வெளிநாட்டு ஊழியர்கள் சட்டவிரோதமாக வழங்கப்படும் லாரி சேவைகளைப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. கிராஞ்சி வே, கிராஞ்சி பெருவிரைவு ரயில் நிலையத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அப்பகுதிக்குப் போதுமான பொதுப் பேருந்துச் சேவைகள் இல்லாததால் வெளிநாட்டு ஊழியர்கள் சட்டவிரோத லாரி சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.
எஸ்எம்ஆர்டி பேருந்துச் சேவைகள் 925, 925M இரண்டும் அந்தப் பாதையில் செல்கின்றன. ஆனால் பேருந்து எண் 925 ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது. 925M, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாள்களிலும் இரவு 7.40 மணிக்கு மேல் இயங்காது.
தங்களின் ஓய்வு நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.40 மணிக்கு மேல் தங்குவிடுதிகளுக்குத் திரும்பும்போது சட்டவிரோத லாரி சேவைகளைச் சார்ந்திருக்கவேண்டிய நிலை ஏற்படுவதாக வெளிநாட்டு ஊழியர்கள் கூறுகின்றனர்.
கிராஞ்சி பெருவிரைவு ரயில் நிலையத்திலிருந்து தங்குவிடுதிகளுக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்ல லாரி ஓட்டுநர்கள் ஒருவழிப் பயணத்துக்காக இரண்டு வெள்ளிக் கட்டணம் வசூலிக்கின்றனர்.
1,300 படுக்கை வசதிகளைக் கொண்டுள்ள அந்தத் தங்குவிடுதி, கிராஞ்சியில் வெளிநாட்டு ஊழியர்கள் வசிக்கும் தங்குவிடுதிகளில் ஒன்று. தனது முழுப் பெயரை வெளியிட விரும்பாத குணசேகரன் எனும் அங்கு வசிக்கும் வெளிநாட்டு ஊழியர், கிராஞ்சி பெருவிரைவு ரயில் நிலையத்திலிருந்து தங்குவிடுதிக்குச் செல்ல தனது நிறுவனம் போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தரவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
“என்னால் வேறு என்ன செய்யமுடியும்? நான் களைப்பாக இருப்பேன். இருட்டில் 4.5 கிலோமீட்டர் தூரம் நடந்து எனது தங்குவிடுதிக்குப் போக நான் விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.
பெருவிரைவு ரயில் நிலையத்திலிருந்து டாக்சியில் தங்குவிடுதிக்குச் செல்ல 10 வெள்ளி வரை ஆகும் என்றார் அதே தங்குவிடுதியில் வசிக்கும் சிவகுமார் எனும் வெளிநாட்டு ஊழியர்.
“ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் நான் பேருந்தில் செல்வதையே விரும்புகிறேன். ஆனால் இரவில் பேருந்துச் சேவை கிடையாது,” என்று திரு சிவகுமார் சொன்னார்.
12 பேர் வரை ஏற்றிச் செல்லக்கூடிய சிறிய லாரிகள், கிராஞ்சி வட்டாரத்தில் உள்ள தங்குவிடுதிகளுக்கு அருகே பலமுறை வந்துபோகும். 22 பேர் வரை ஏற்றிச் செல்லும் பெரிய லாரிகளும் அப்பகுதியில் காணப்பட்டிருக்கின்றன.
பொதுவாக சுங்கை புலோ சதுப்புநிலப் பகுதியைக் காணச் செல்வோர்தான் 925M பேருந்துச் சேவையை அதிகம் உபயோகிப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
“கூடுமானவரை அதிகமான பயணிகளுக்கு சேவை வழங்கவேண்டும்; அதேவேளையில் எத்தனை பேர் பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர், தேவையற்ற செலவின்றி எவ்வாறு சேவைகளை வழங்குவது போன்ற அம்சங்களைக் கருத்தில்கொள்வோம். இவ்வாறு பேருந்துச் சேவைகளுக்குத் திட்டமிடுவோம்,” என்று ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
லாரியை நடத்தும் நிறுவனம் அல்லது லாரியைப் பயன்படுத்தும் நிறுவனத்துக்கு வேலை பார்க்காத ஊழியர்களை ஏற்றிச் செல்வது சட்டவிரோதமானது என்பதை ஆணையம் சுட்டியது. அக்குற்றத்தை முதல்முறையாகப் புரிவோருக்கு அதிகபட்சமாக 1,000 வெள்ளி அபராதமும் மூன்று மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
லிட்டில் இந்தியா உள்ளிட்ட இடங்களிலிருந்து துவாசின் ஒதுக்குப்புறமான பகுதிகள் போன்றவற்றில் இருக்கும் தங்குவிடுதிகளுக்கு ஊழியர்களை அழைத்துச் செல்ல சில நிறுவனங்கள் போக்குவரத்து நிறுவனங்களின் சேவையை நாடுவதாகத் தெரிய வந்துள்ளது. சிங்கப்பூர் மேக்சிகேப் போக்குவரத்து நிறுவனம் இத்தகவலைத் தெரிவித்தது.