ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரல் வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 23 வயது பெண் மோட்டார்சைக்கிளோட்டி மாண்டார்.
காலை 10 மணியளவில் ஜூரோங் கேட்வே சாலையில் புளோக் 131க்கு அருகே விபத்து நிகழ்ந்தது குறித்து தங்களுக்குத் தகவல் வந்ததென சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிள் சறுக்கியதாக நம்பப்படுகிறது என்றும் அதை ஓட்டியவர் சம்பவ இடத்திலேயே மாண்டார் என்றும் காவல்துறை கூறியது.
இந்த விபத்து தொடர்பில் பதிவான படங்களும் காணொளிகளும் எஸ்ஜி ரோட் விஜிலான்டே (SGRV) ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.
சாலையில் கறுப்பு நிற மோட்டார்சைக்கிள் ஒன்று கவிழ்ந்து கிடந்ததும் அதற்கு அருகே வெள்ளி நிறத்திலான தலைக்கவசம் இருந்ததும் அவற்றில் தெரிந்தன.
சம்பவ இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது. மோட்டார்சைக்கிளின் பாகங்கள் என்று நம்பப்படும் சிதைவுகளும் அங்கே காணப்பட்டன.
இச்சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.