பேநவ் பரிவர்த்தனை வசதி செயலிழப்பு குறித்து நாணய ஆணையம் ஆய்வு

1 mins read
c575152b-952f-4c3b-b9a0-5297eadce44b
சிங்கப்பூர் நாணய ஆணையம் - கோப்புப் படம்

டிபிஎஸ் வங்கியின் பேநவ், ‘ஃபாஸ்ட் அண்ட் செக்கியூர் டிரான்ஃபர்ஸ்’ (ஃபாஸ்ட்) பணப் பரிவர்த்தனை வசதி சென்ற வாரம் செயலிழந்ததற்கான அடிப்படைக் காரணம் குறித்த ஆய்வில் சிங்கப்பூர் நாணய ஆணையமும் டிபிஎஸ் வங்கியும் இணைந்து பணியாற்ற உள்ளன.

இது குறித்த ஊடகக் கேள்விகளுக்கு திங்கட்கிழமையன்று பதிலளித்த ஆணையத்தின் பேச்சாளர் இந்தச் செயலிழப்பினால் செப்டம்பர் 26ஆம் தேதி மிக அதிகமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதை வங்கி நாணய ஆணையத்திடம் தெரிவித்ததாக விளக்கினார்.

ஃபாஸ்ட் என்பது வங்கிகளுக்கு இடையேயான இணையப் பணப் பரிவர்த்தனை வசதி.

இவ்விரு சேவைகளும் ஒரு நாளுக்குள் மீண்டும் செயல்படத் தொடங்கினாலும், நடைபெற்றுள்ள பரிவர்த்தனைகளை சரிபார்க்கவும் டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கிக் கணக்குகளை திருத்தி அமைப்பதற்கும் மூன்று நாள்கள் எடுத்ததாக ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

வங்கிக் கணக்குகளை சரிபார்ப்பது என்பது பரிவர்த்தனைகளை நடைமுறைப்படுத்தும் போது அனுமதிக்கப்படாத மாற்றங்கள் நிகழவில்லை என்பதை உறுதி செய்வது.

“வங்கிகளின் எந்த சேவையில் இடையூறு ஏற்பட்டாலும் அதிலிருந்து வங்கிகள் விரைவில் மீண்டு வருவதை ஆணையம் எதிர்பார்ப்பதுடன் இதில் பாதிக்கப்பட்டவர்களின் தாக்கம் விரைவாகவும் *வெளிப்படைத்தன்மையுடனும் சரிசெய்யப்பட வேண்டும்,” என்று ஆணையத்தின் பேச்சாளர் விளக்கினார்.

இந்தப் பிரச்சினையின் அடிப்படைக் காரணம் குறித்தும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், அவர்களின் பரிவர்த்தனைகள் குறித்த பிரச்சினைகளையும் டிபிஎஸ் வங்கி எவ்வாறு கையாண்டுள்ளது என்பதை அறிய அந்த வங்கியை தொடர்பு கொள்ளும் என்று அந்தப் பேச்சாளர் மேலும் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்