துறைமுக அணைகரையில் கான்கிரீட் தூண் ஒன்று விழுந்ததைத் தொடர்ந்து நீருக்கடியில் சிக்கி முக்குளிப்பாளர் ஒருவர் இறந்த சம்பவம் தொடர்பில், பாதுகாப்பு குறைபாடுகளுக்காக அவரது முதலாளிக்கு செவ்வாய்க்கிழமை $200,000 அபராதம் விதிக்கப்பட்டது.
‘மரின் டைவிங் அண்ட் எஞ்சினியரிங்’ நிறுவனத்துக்காக பணியாற்றிய திரு முகம்மது ஃபிர்தவுஸ் ஜஸ்னி, 27, சிங்கப்பூரின் தென்தீவான செபரோக் தீவில் உள்ள அணைகரையில் 2018ல் நிகழ்ந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.
கப்பல்களைக் கட்டி, பழுதுபார்க்கும் தொழிலில் உள்ள அந்நிறுவனத்துக்கு வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டது.
நீருக்கடியிலான பணிகளுக்குப் பயிற்சிபெற்ற, சான்றளிக்கப்பட்ட முக்குளிப்பாளர்களை மட்டும் ஈடுபடுத்த அந்நிறுவனம் தவறிவிட்டதாக மனிதவள அமைச்சின் வழக்கறிஞர் டெல்விந்தர் சிங் கூறினார்.
அச்சம்பவம் தொடர்பில் இடர் மதிப்பீடு செய்யவும் பாதுகாப்பான வேலை நடைமுறைகளை மேற்கொள்ளவும் அந்நிறுவனம் தவறியது.
சம்பவத்தின்போது அந்நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளராக இருந்த டான் ஜியுன் பெர்ங்கிற்கு செவ்வாய்க்கிழமை $20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பாதுகாப்பான வேலை நடைமுறைகளைச் செயல்படுத்தத் தவறிய அவரது கவனக்குறைவான செயலால் முக்குளிப்பாளர்களின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவித்ததாகக் கருதப்பட்டது.
திரு ஃபிர்தவுஸ் பயிற்சிபெற்ற தொழில்முறை முக்குளிப்பாளர் இல்லை என மனிதவள அமைச்சு வழக்கறிஞர் கூறினார். முதல் நிலை, இரண்டாம் நிலை முக்குளிப்புப் பயிற்சிக்கு திரு ஃபிர்தவுஸ் செல்லவில்லை.
மாறாக, திறந்தவெளி நீர் முக்குளிப்புச் சான்றிதழை மட்டும் அவர் பெற்றிருந்தார். அது, ‘ஸ்கூபா டைவிங்’ முக்குளிப்பார்களுக்கானது.
திரு ஃபிர்தவுசின் வேலையிட முக்குளிப்பு மேற்பார்வையாளர் திரு கோ சியூவ் டோங்கும் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை பயிற்சியைப் பெறவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.