நிதித் திட்டமிடலுக்கான புதிய வழிகாட்டிக் குறிப்பேடு சனிக்கிழமை (அக். 7) அறிமுகம் கண்டுள்ளது.
சிங்கப்பூரர்கள் முழுமையான நிதித் திட்டமிடலின்போது கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்களைத் தெரிந்துகொள்ள அது உதவும்.
சிங்கப்பூர் வங்கிகள் சங்கம்,சிங்கப்பூர் நிதி ஆலோசகர் சங்கம், ஆயுள் காப்புறுதிச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து சிங்கப்பூர் நாணய ஆணையம் அக்குறிப்பேட்டை உருவாக்கியுள்ளது.
மத்திய சேம நிதி வாரியமும் தேசிய நிதிக் கல்வித் திட்டமும் கூட்டாக ஏற்பாடு செய்த ‘ரெடி ஃபார் லைஃப்’ விழாவில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அந்தக் குறிப்பேட்டை வெளியிட்டார்.
‘மணிசென்ஸ்’ இணையத்தளத்தில் அதைக் காணலாம். குறிப்பேட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களில் சில:
முதலாவது, மூன்று முதல் ஆறு மாத காலச் செலவுகளுக்கு ஈடான தொகையை அவசரகாலத் தேவைக்காக ஒதுக்க வேண்டும்.
இரண்டாவது, உயிரிழப்பு, நிரந்தர உடற்குறை போன்றவை தொடர்பில் ஆண்டு வருவாயைப்போல் ஒன்பது மடங்குத் தொகைக்குக் காப்புறுதி எடுக்க வேண்டும். கடுமையான நோய்களால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் ஆண்டு வருவாயைப்போல் நான்கு மடங்குத் தொகைக்குக் காப்புறுதி எடுக்க வேண்டும்.
அடுத்து, வருவாயில் அதிகபட்சமாக 15 விழுக்காட்டை காப்புறுதிப் பாதுகாப்புக்குச் செலவிட வேண்டும்.
மேலும், ஓய்வுக்காலத்திற்கும் இதர நிதி இலக்குகளுக்கும் வருவாயில் குறைந்தபட்சம் 10 விழுக்காட்டை முதலீடு செய்யவேண்டும்.
இவை தவிர, நிதித் தேவைகளைச் சமாளிக்க உதவும் அரசாங்கத் திட்டங்களையும் அக்குறிப்பேடு எடுத்துக்கூறுகிறது.
நிதித் திட்டமிடல் ஓர் எளிதான நடைமுறையே என்று உணரவைக்க குறிப்பேடு உதவும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் நம்பிக்கை தெரிவித்தது.