சிங்கப்பூர் வயர்கார்ட் ஏசியா ஹோல்டிஸ் முன்னாள் அதிகாரிக்கு செவ்வாய்க் கிழமை பத்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்நிறுவனத்தில் 47,000 வெள்ளி கையாடப்பட்ட விவகாரத்தில் அவர் உடந்தையாக இருந்துள்ளார்.
தனது மேலதிகாரியான அப்போதைய துணைத் தலைவர் எடோ குர்னியவான், அப்போதைய கட்டுப்பாட்டு மேலாளராகச் செயல்பட்ட சீ லீ வீயிடம் கடனுக்கு விண்ணப்பிக்க உத்தரவிட்டிருந்தார்.
இதில் கிடைத்த 47,000 வெள்ளியில் திருமதி சீ, 30, அடையாளம் தெரியாத ஒருவருக்கு 40,250 வெள்ளியைக் கொடுத்தார். அதில் 3,314 வெள்ளியை தனது மேலதிகாரியான எடோ குர்னியவானுக்கு அவர் கொடுத்தார்.
ஜெர்மன் பணப் பட்டுவாடா நிறுவனமான வயர்கார்டின் சிங்கப்பூர் துணை நிறுவனமான வயர்கார்ட் ஏசியாவில் பணியாற்றிக் கொண்டிருந்த திருமதி ஸி, எஞ்சிய 3,440 வெள்ளியை தனது சொந்தச் செலவுக்கு வைத்துக் கொண்டார்.
இந்த நம்பிக்கை மோசடிக் குற்றத்தில் தனது மேலதிகாரிகளான குர்னியவான், சாய் அய் லிம் ஆகியோருக்கு அவர் உடந்தையாக இருந்துள்ளார்.
அவருக்கு தண்டனை விதிக்கும்போது கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய இரு குற்றச்சாட்டுகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. திருமதி சீ, கையாடப்பட்ட பணத்தில் 18,200 வெள்ளியை திருப்பியளித்துள்ளார்.
2023 ஜூன் மாதம் சாய் உட்பட இதர இரண்டு வயர்கார்ட் ஏசியா ஊழியர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் இருவரும் தங்கள் மீது சுமத்தப்பட்ட நம்பிக்கை மோசடி குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
ஜேம்ஸ் அகா வர்தனா, 40 என்பவருக்கு 21 மாதமும் திரு சாய்க்கு பத்து மாதமும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.