மருத்துவர் ஒருவர், பீர் குடித்துவிட்டு காரை ஓட்டிச் சென்றபோது சாலைத் தடுப்புகளைப் பார்த்து அதிர்ந்துவிட்டார். காவல்துறையினர் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.
உடனே இவர், இருக்கையை மாற்ற முயற்சி செய்தார். ஆனால் அவரது போதாத காலம் காவல்துறையினரிடம் வகையாகச் சிக்கவைத்துவிட்டது.
உட்லண்ட்சில் உள்ள ‘டாக்டர் நா அண்ட் லீ’ குடும்ப மருந்தகத்தில் வேலை பார்க்கும் 41 வயது டாக்டர் நா குவாங் மெங் ஒட்டிய காரை அதிகாரிகள் நிறுத்தி மூச்சு சோதனை நடத்தினர். அப்போது அவர் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் குடித்திருக்கவில்லை என்பது தெரிந்தது. இருந்தாலும் வெள்ளிக்கிழமை அவருக்கு 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. நீதித் துறையின் நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நீதிமன்ற விசாரணையில் பேசிய துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் சியே ஜெர் யூவான், 2022ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதியன்று டாக்டர் நா, விருந்து நிகழ்ச்சியில் மூன்று முதல் நான்கு குவளை பீர் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியதாகத் தெரிவித்தார்.
இரவு 11.30 மணியளவில் அப்பர் வில்கி ரோடு நோக்கி சோஃபியா வழியாக அவர் சென்றார்.
சாலைத் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் சோதனையிடுவதைக் கண்டதும் முன்பக்கத்தில் அமர்ந்திருந்தவருடன் இருக்கையை மாற்றிக் கொள்ள முயற்சி செய்தார்.
ஆனால் அருகில் இருந்த பயணி அதற்குச் சம்மதிக்கவில்லை. அதற்குள் காவல்துறையினரை கார் நெருங்கிவிட்டது. அதிகாரிகள் அவரிடம் மூச்சு சோதனை நடத்தினர். அதில் அதிகமாக மதுபானம் குடித்திருப்பது தெரிய வந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் மற்றொரு முறை அவர் சோதிக்கப்பட்டபோது மதுபானம் அளவுக்கு அதிகமாக குடிக்கவில்லை என்பது தெரிந்தது.