மாணவர்களை முழுமையான பாட அடிப்படையில் வகைப்படுத்தும் (முழு எஸ்பிபி) ஏற்பாடு காரணமாக மாணவர்கள் தங்களுடைய கல்விப் பயணம் முழுவதிலும் பல்வேறு வாய்ப்புகளை எட்ட முடியும்.
வெவ்வேறான ஆற்றல்களைக் கொண்ட, வெவ்வேறான நாட்டமுள்ள சகமாணவர்களுடன் அவர்கள் சேர்ந்து கல்வி கற்க முடியும்.
பள்ளி முதல்வர்கள் சனிக்கிழமை நடந்த ஒரு கருத்தரங்கில் பெற்றோரிடம் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தனர்.
முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டு ஏற்பாட்டின்கீழ் 2024 முதல் 120 பள்ளிகளைச் சேர்ந்த உயர்நிலை 1 மாணவர்கள் தங்களுடைய ஆற்றலைப் பொறுத்து வெவ்வேறான நிலைகளில் பாடங்களைப் படிப்பார்கள்.
மாணவர்கள் தங்களுடைய தொடக்கப்பள்ளி இறுதித்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் (பிஎஸ்எல்இ) தொடக்கத்தில் வகைப்படுத்தப்படுவார்கள்.
என்றாலும் உயர்நிலைக் கல்வியில் மேலும் பல பாடங்களைத் தங்களின் நாட்டம், விருப்பம், தேவை ஆகியவற்றுக்கு ஏற்ப வெவ்வேறு நிலைகளில் கற்றுக்கொள்ளக்கூடிய நீக்குப்போக்கு அவர்களுக்கு இருக்கும்.
பல வகை ஆற்றல்களைக் கொண்ட மாணவர்களும் வகுப்புகளில் இருப்பார்கள்.
இதன்மூலம் மாணவர்கள் வெவ்வேறான கல்வித் திறமையுடன் கூடிய சகமாணவர்களிடம் இருந்து பலவற்றையும் கற்றுக்கொள்ள முடியும்.
அந்த வகைப்பாட்டு முறை மாணவர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை, முழுமையான பாட அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இருந்தும் உயர்நிலைப் பள்ளி முதல்வர்களிடம் இருந்தும் தெரிந்துகொள்ள பெற்றோர் விரும்பினர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிவார்ந்த பெற்றோர்-பிஎஸ்எல்இக்குப் பிந்தைய கல்விக் கருத்தரங்கில் ஐந்து பள்ளி முதல்வர்களும் மாணவர்களும் உரையாற்றினர்.
அந்த முதல்வர்களில் ஒருவரான ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த திருவாட்டி டான் போ சின், முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டு முறை பன்மயத்தை ஆதரிக்க வேண்டிய தேவை பற்றிய பள்ளியின் புரிந்துணர்வை அதிகப்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்தார்.
பள்ளியின் கீழ் உயர்நிலை வகுப்புகளிலும் கலாசாரம், கல்வி நாட்டங்கள், பன்மயப் பாலினம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து இருக்கிறார்கள் என்று போவென் உயர்நிலைப் பள்ளி முதல்வர் திருவாட்டி லோ சி ஹுய் கூறினார்.
செயின்ட் ஆண்ட்ருஸ் உயர்நிலைப் பள்ளி முதல்வரான திரு லீ ஹான் ஹுவா, ‘சகோதரர்கள் குழுமமாக’ இருப்பதால் இந்தப் பள்ளி பெருமையடைகிறது என்று தெரிவித்தார்.
அதாவது மாணவர்கள் சேர்ந்து அடுத்த நிலைக்கு முன்னேற விரும்புகிறார்கள் என்றார் அவர்.
மாணவர்களின் ஆற்றல்களைப் பொறுத்து முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டு முறையை வடிவமைத்து அமல்படுத்தும் தன்னாட்சிப் பள்ளிகளுக்கு இருப்பதாக கிராஞ்சி உயர்நிலைப் பள்ளி முதல்வர் கோ சூன் ஹோ கூறினார்.
ஹோலி இன்னோசன்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பொதுப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உயர்நிலை 1ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இலக்கியத்தைப் படிப்பார்கள் என்று அந்தப் பள்ளியின் முதல்வர் ரெபேகா சியூ கூறினார்.
கருத்தரங்கில் உரையாற்றிய ஹோலி இன்னோசன்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை 1 மாணவர் ஈத்தன் சியோவுக்கு இந்த ஆண்டில் பருவம் 3ல் கடுமையான நிலையில் கணக்குப் பாடத்தைப் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
உயர்நிலையில் அந்த மாணவர் அறிவியலையும் ஆங்கிலத்தையும் கற்கிறார்.
சவால்மிக்க கேள்விகளை எதிர்நோக்கி அவற்றுக்கு விடை கண்டுபிடிக்க நான் விரும்புகிறேன். வகுப்பறையின்போது கேள்வி கேட்க விரும்பும் என் நண்பர்களுக்கு நான் உதவுகிறேன் என்றார் அவர்.