மக்கள் செயல் கட்சியின் சமூக அறநிறுவனம், தான் நிர்வகித்து நடத்தும் அனைத்து பாலர்பள்ளிகளிலும் 2027ஆம் ஆண்டு வாக்கில் தமிழ், மலாய், சீனம் ஆகிய மூன்று தாய் மொழிகளையும் கற்பிப்பதே தனது இலக்கு என்று அறிவித்து இருக்கிறது.
இப்போது அந்த அறநிறுவனத்தின் அனைத்து பாலர்பள்ளிகளிலும் சீனம் மட்டுமே போதிக்கப்படுகிறது.
அந்த அறநிறுவனத்தின் வருடாந்திர குடும்ப தின விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் கலந்துகொண்ட துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் இது பற்றி தெரிவித்தார்.
ஜூரோங் பறவைப் பூங்கா ஜனவரியில் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 17 ஹெக்டர் பரப்பளவிலான பறவைகள் சொர்க்கம் என்ற புதிய பூங்கா திறக்கப்பட்டது. அதில் மசெக அறநிறுவனத்தின் வருடாந்திர குடும்ப தினம் நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் 300 குடும்பங்கள் கலந்துகொண்டன.
மசெக சமூக அறநிறுவனத்தின் தாய்மொழிகள் போதனை இலக்கு மிகச் சிரமமான ஒன்று. அதைச் செய்து முடிப்பது எளிதல்ல. அதற்கு ஒரு சில ஆண்டுகள் பிடிக்கும்.
சிங்கப்பூரில் சரியான மொழி தகுதியுடன் கூடிய ஆசிரியர்கள் போதிய அளவுக்கு இல்லை என்பதே இதற்குக் காரணம் என்று திரு வோங் கூறினார்.
இருந்தாலும் அறநிறுவனம் உயர் தரங்களை நிர்ணயிப்பது மிகவும் நல்லது என்று திரு வோங் குறிப்பிட்டார்.
காலவோட்டத்தில் இந்த அறநிறுவனத்தின் பாலர்பள்ளிகளில் கற்கும் பிள்ளைகள் அனைவரும் தங்கள் தாய் மொழியில் வலுவான அடிப்படையைக் கொண்டிருப்பார்கள் என்று திரு வோங் தெரிவித்தார்.
குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவ இந்த ஆண்டில் இந்த அறநிறுவனம் சுமார் $4 மில்லியன் தொகையை கொடுக்கும்.
நிதியுதவி மூலம் விநியோகிக்கப்படும் அந்தத் தொகை, கல்வி செறிவாக்க செயல்திட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ள உதவும்.
பிள்ளைகளின் வீட்டுச் சூழல் மேம்படவும் அது ஆதரவு அளிக்கும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.