கல்வி தொடர்பான கொள்கைகளில் பெற்றோரின் கருத்துகளை அறிய கல்வி அமைச்சு விரும்புகிறது. இதற்காக புதிய ஆய்வு முயற்சி ஒன்றை கல்வி அமைச்சு தொடங்கியிருக்கிறது. அதன்படி பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர்கள் முக்கிய கல்விக் கொள்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ள முடியும்.
அக்டோபர் 16, 17 தேதிகளில் ‘பெற்றோர் குரல்’ எனும் ஆய்வில் பங்கேற்க 10,000க்கும் மேற்பட்ட பெற்றோர் மின் அஞ்சல் வழியாக அழைக்கப்பட்டனர் என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, புகுமுக வகுப்பு ஆகியவற்றின் பல்வேறு வயதுப் பிரிவைச் சேர்ந்த பிள்ளைகளை பிரதிநிதிக்கும் வகையில் அமைச்சின் தரவுகளிலிருந்து உத்தேசமாக பெற்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஏற்கெனவே பள்ளிகள் வழியாக பெற்றோர் ஆதரவுக் குழுக்கள் போன்ற அமைப்புகள் மூலம் அவர்களின் கருத்துகளை அமைச்சு அறிந்து வருகிறது. இதற்கு மேலாக புதிய முயற்சியாக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது என்று அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஆண்டுக்கு ஒருமுறை சில ஆய்வுகளில் பங்கேற்க பெற்றோர் அழைக்கப்படுகின்றனர்.
இரண்டு முதல் 14 வயது வரையிலான நான்கு பிள்ளைகளுக்குத் தாயான டாக்டர் கூ, பெற்றோர்களும் கல்விக் கொள்கையை வடிவமைப்பதில் உதவ முடியும் என்றார்.
வீட்டில் பிள்ளைகள் எப்படி படிக்கின்றனர், பள்ளிகளில் மாணவர்களுடனான ஆசிரியர்களின் அனுபவம் எப்படி இருக்கிறது உள்ளிட்ட தகவல்களை பெற்றோர் பகிர்ந்துகொள்ள முடியும் என்றார் அவர்.
கல்வி அமைச்சு அண்மை ஆண்டுகளாக பெற்றோரின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2020 ஆகஸ்ட் மாதத்தில் இன்ஸ்டகிராம் கணக்குத் தொடங்கப்பட்டது.
2019ல் பள்ளிகள் எப்படி குடும்பத்துடன் நெருக்கமாகச் செயல்படுவது என்பது குறித்த வழிகாட்டியை அமைச்சு வெளியிடப்பட்டது.